கோலி தந்த ஐடியா தான் அது.. நியூசி,யின் மிடில் ஆர்டரை சுருட்டியது எப்படி?.. ஷர்துல் சுவாரஸ்ய பதில்!
இந்தூர்: நியூசிலாந்து அணியுடனான 3வது ஒருநாள் போட்டியில் 3 விக்கெட்களை எடுத்து கொடுத்த ஷர்துல் தாக்கூருக்கு விராட் கோலி மற்றும் ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் ஸ்கெட்ச் போட்டு கொடுத்த சுவாரஸ்ய தகவல் வெளியாகியுள்ளது.
இரு அணிகளுக்கும் இடையேயான 3வது போட்டி இந்தூரில் உள்ள ஹொல்கார் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்கள் இழப்புக்கு 385 ரன்களை குவித்தது. இதன் பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி 41.2 ஓவர்களில் 295 ரன்களுக்கெல்லாம் அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்தது.

ஆட்ட நாயகன் விருது
இந்தியாவின் ஓப்பனிங் வீரர்கள் ரோகித் சர்மா (101) மற்றும் சுப்மன் கில் (112) என இருவருமே சதம் அடித்தனர். ஆனால் இவர்களை விடுத்து, வேகப்பந்துவீச்சாளர் ஷர்துல் தாக்கூருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இந்தியாவை தோல்வி பாதைக்கு அழைத்துச்சென்ற முக்கிய பார்ட்னர்ஷிப்களை ஷர்துல் தாக்கூர் தான் திருப்புமுனை ஏற்படுத்தினார். மொத்தம் 6 ஓவர்களை வீசிய ஷர்துல் 45 ரன்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்களை கைப்பற்றினார்.

ஷர்துல் தாக்கூர் தகவல்
இந்நிலையில் தனது செயல்பாட்டிற்கு பின் விராட் கோலி இருந்ததாக ஷர்துல் தாக்கூர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், டேரில் மிட்செலை 24 ரன்களுக்கு அவுட்டாக்கிய பின்னர் டாம் லேதம் களத்திற்கு வந்தார். அப்போது விராட் கோலி நேராக என்னிடம் வந்து ஸ்லோயர் பால் வீசுமாறு கூறினார். லேதமுக்கு ஸ்லோயர் பந்து வீக்னஸாக அமையும் என கூறிவிட்டு சென்றார்.

கேப்டன்கள் தந்த ஆதரவு
இதன்பின்னர் ஹர்திக் பாண்ட்யா என்னிடம் வந்து தைரியமாக இருக்கிறாயா என நம்பிக்கை கொடுத்துவிட்டு சென்றார். கேப்டன் ரோகித் சர்மா கடைசியாக என்னிடம் திட்டத்தை கேட்டுவிட்டு, அதை செயல்படுத்த அனுமதி கொடுத்தார். இதனால் தான் முதல் பந்திலேயே டாம் லேதமின் விக்கெட்டை எடுக்க முடிந்ததாக ஷர்துல் தாக்கூர் கூறினார்.

பேட்டிங்கிலும் தாக்கம்
பந்துவீச்சை போலவே பேட்டிங்கிலும் ஷர்துல் தாக்கூர் தாக்கத்தை ஏற்படுத்தினார். கடைசி நேரத்தில் களமிறங்கிய அவர் 17 பந்துகளில் 3 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 25 ரன்களை விளாசினார். இதுகுறித்து பேசிய அவர், எதிரணி பவுலர்கள் தாக்குதலை தொடங்கும் போது நின்று விளையாட வேண்டியது அவசியம். நான் எதை பற்றியும் கவலைப்படாமல் தான் பேட்டிங் செய்தேன் என கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications