மொஹாலி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் அணியை 56 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ வீழ்த்தியது. மேலும் டாஸ் வென்று முதலில் பந்து வீச்சு தேர்வு செய்த பஞ்சாப் அணி லக்னோவை 257 ரன்கள் அடிக்கவிட்டது.
இதுவே தோல்விக்கு மிகப்பெரிய காரணமாக அமைந்தது. பஞ்சாப் அணியும் 200 ரன்கள் கடந்தாலும் அந்த இமாலய இலக்கை தொட முடியவில்லை. இந்த நிலையில் தோல்வி குறித்து பேசிய ஷிகர் தவான், நாங்கள் மிகவும் அதிக ரன்களை கொடுத்து விட்டோம். அந்த தவறுக்கான கூலி தான் இது.

நாங்கள் இன்று ஒரு கூடுதல் வேகப்பந்து வீச்சாளர் வைத்து விளையாடினோம். அந்தத் திட்டம் எங்களுக்கு ஆப்பாக அமைந்து விட்டது. ஆனால் லக்னோ அணி கூடுதலாக ஒரு சுழற் பந்துவீச்சாளர் வைத்து விளையாடினார்கள். நான் சில மாற்றத்தைக் கொண்டு வர நினைத்தேன். ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
இருப்பினும் அது குறித்து எனக்கு கவலை இல்லை. இது எனக்கு ஒரு நல்ல பாடமாக அமைந்தது. நிச்சயமாக அடுத்த போட்டியில் பலமாக திரும்பி வருவோம். ஷாருக்கான் பேட்டிங் கீழ் வரிசையில் களமிறக்கியது பின்னால் எந்த காரணமும் இல்லை. லிவிங்ஸ்டோனும் சாம் கரனும் பந்தை அதிரடியாக அடிக்கக்கூடியவர்கள்.
அதனால் அவர்களை முன்பே களமிறக்கினோம். இம்பேக்ட் வீரர் விதி சில சமயம் நன்றாக இருக்கிறது. சில சமயம் நாம் எடுக்கும் முடிவு பலன் அளிக்க மாட்டேங்கிறது என்று தவான் கூறியுள்ளார். இதை தொடர்ந்து பேசிய லக்னோ அணியின் அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரான் இன்றைய ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி எங்கள் அணிக்கு இரண்டு புள்ளிகளை பெற்றுத் தந்தது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மைதான பவுண்டரிகள் ஒரு புறம் பெரியதாகவும் ஒருபுறம் சிறியதாகவும் இருந்ததாக குறிப்பிட்டவர் பவர் பிளேவில் மட்டும் எதிரணியை கட்டுப்படுத்தி விட்டால் இந்த போட்டியில் வெற்றி பெற்று விடலாம் என்று தாம் நம்பியதாக கூறினார்