ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இணை உரிமையாளர் ராஜ்குந்த்ரா மட்டுமல்ல, அவரின் மனைவியும், உரிமையாளருமான, நடிகை ஷில்பா ஷெட்டியின் நடவடிக்கைகளும் சந்தேகத்திற்கிடமாகவே இருந்துள்ளன.
பெட்டிங்கில் ஈடுபட்டதாக ஷில்பா கணவர் ராஜ்குந்த்ராவுக்கு எல்லாவகை கிரிக்கெட்டில் இருந்தும் ஆயுட்கால தடை விதித்துள்ளது நீதிபதி லோதா கமிட்டி. இந்நிலையில், ஆங்கில பத்திரிகையொன்று, ஷில்பா ஷெட்டி நடவடிக்கையிலும் சந்தேகம் உள்ளதாக ஆவணங்கள் வெளியிட்டுள்ளது.

ராஜஸ்தான் அணியின் 11.7 சதவீத பங்குகளை 2009ம் ஆண்டில், ஷில்பா ஷெட்டி மற்றும் குந்த்ரா ஆகியோர் ஜெய்ப்பூர் இன்டர்நேஷனல் கிரிக்கெட் லிமிட்டடிடமிருந்து வாங்கினர். 2010ல் ஷில்பா, அந்த நிறுவனத்திற்கு ரூ.5.7 கோடியை முன்பணமாக கொடுத்துள்ளார்.
விளம்பர ஸ்பான்சர்ஷிப் உள்ளிட்டவற்றுக்காக இப்பணம் தரப்பட்டுள்ளது. ஆனால், கிரிக்கெட் சூதாட்டம் பற்றி விசாரித்த முட்கல் கமிட்டி தனது அறிக்கையை 2014 பிப்ரவரி 10ம் தேதி சுப்ரீம்கோர்ட்டில் தாக்கல் செய்த ஒரு வாரம் கழித்து, அந்த அட்வான்ஸ் தொகையை ஷில்பா வாபஸ் பெற்றுக்கொண்டார். ஜெய்ப்பூர் இன்டர்நேஷனல் நிறுவனத்துடனான விளம்பரதாரர் தொடர்பான ஒப்பந்தத்தையும் ரத்து செய்துவிட்டார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு தடை விதிக்கப்படலாம் என்ற எண்ணத்திலேயே அவர் பணத்தை வாபஸ் பெற்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஆனால், வணிக ரீதியாக பெரிய லாபம் கிடைக்காது என்பதாலேயே ஒப்பந்தம் ரத்தானதாக ஷில்பா அப்போது கூறியுள்ளார். திடீரென ஒப்பந்தம் ரத்தானதற்கான காரணம் மர்மமாக உள்ளது. ஷில்பாவுக்கு தெரியாமல் பெட்டிங் நடந்திருக்காதோ என்ற ஒரு, சந்தேகம் ரசிகர்களுக்கு எழுந்துள்ளது.