மும்பை : இங்கிலாந்தை சேர்ந்த இஸ்லாமிய கிரிக்கெட் வீரர் சோகிப் பஷீருக்கு மத்திய அரசு விசா வழங்காதது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட 20 வயதான கிரிக்கெட் வீரர் பஷீர் இங்கிலாந்து அணிக்காக விளையாட தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.
கடந்த ஒரு மாதத்திற்கு மேல் விசா கேட்டு சோயிப் பஷீர் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் அவருடைய விசா மட்டும் இந்திய அரசால் அங்கீகரிக்கப்படவில்லை. இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி வியாழக்கிழமை ஹைதராபாத்தில் தொடங்க உள்ள நிலையில் பஷீர் இந்தியா வராமல் இங்கிலாந்துக்கு அபுதாபியில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்.

இந்த நிலையில் இந்த விவகாரம் மிகப்பெரிய சர்ச்சையை இங்கிலாந்தில் ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுன்னாக்கின் செய்தி தொடர்பாளர் இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார்.இது குறித்து பேசிய அவர் நான் சில குறிப்பிட்ட ஒருவருக்காக குறித்து கருத்து கூற முடியாது.
ஆனால் இது போல பல குற்றச்சாட்டுகள் இந்திய அதிகாரிகள் மீது வந்திருக்கிறது. குறிப்பாக பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த பிரிட்டிஷ் குடிமகன்களுக்கு இந்தியா விசா வழங்குவதில் தாமதம் செய்வதாக பல குற்றச்சாட்டுகள் வந்திருக்கிறது.
இது குறித்து நாங்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் உள்ள இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகளிடம் எங்களுடைய புகாரை தெரிவித்திருக்கிறோம் என்று கூறி இருக்கிறார்.
பிரிட்டிஷ் அரசின் தலையீட்டை அடுத்து தற்போது சுழற் பந்துவீச்சாளர் சோயிப்புக்கு விசா வழங்கப்பட்டிருக்கிறது. எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் அவர் பங்கேற்க முடியாது என்றாலும், அவர் உடனடியாக இங்கிலாந்தில் இருந்து ஹைதராபாத்துக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.ஏற்கனவே இங்கிலாந்தைச் சேர்ந்த மோயின் அலிக்கு ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஒரு மாதத்திற்கு மேல் விசா கிடைக்காமல் தாமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.