அக்தர் கோபம்
ஷோயப் அக்தர் பாரபட்சம் பார்க்காமல் ஆமிரை விளாசி பேசி இருக்கிறார். ஆமிர் முன்பு எந்த நிலையில் இருந்தார், என்பதை சுட்டிக் காட்டி, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் என்ன தான் நடக்கிறது என தன் கோபத்தை கொட்டி இருக்கிறார்.
ஏன் ஓய்வு?
ஆமிர் பாகிஸ்தான் அணியின் முன்னணி வேகப் பந்துவீச்சாளர். உலகக்கோப்பை தொடரில் கூட சிறப்பாக செயல்பட்டார். அடுத்து நடைபெற உள்ள 2020 டி20 உலகக்கோப்பை தொடருக்கு தான் சிறப்பாக தயாராக வேண்டும் என்பதால், டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அவருக்கு வயது 27 தான் ஆகிறது என்பதால் இந்த முடிவு பாகிஸ்தான் மட்டுமின்றி, பிற கிரிக்கெட் ஆடும் நாடுகளிலும் அதிர்வலைகளை உண்டாக்கி இருக்கிறது.
அக்தர் என்ன சொன்னார்?
அக்தர் கூறுகையில், வீரர்கள் தங்கள் உச்சத்தை எட்டும் வயதில் ஆமிர் டெஸ்ட் போட்டிகளில் ஓய்வு பெற்றது எனக்கு பெரிய ஏமாற்றமாக உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆமிர் திருப்பி செலுத்த வேண்டிய நேரம் இது. பாகிஸ்தான் டெஸ்ட் போட்டிகளில் மோசமாக ஆடி வரும் நிலையில், அணிக்கு உதவி தொடர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
டி20யில் ஆட விட மாட்டேன்
மேலும், நான் முட்டியில் காயத்தோடு விளையாடி இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர்களை வெல்ல உதவினேன். நான் பாகிஸ்தான் தேர்வுக் குழுவில் இருந்தால் இது போன்ற பையன்களை டி20யில் (உள்ளூர் டி20 தொடர்கள்) ஆடவே விட மாட்டேன். பணம் சம்பாதிக்க என ஒரு நேரம் உண்டு, ஆனால், இப்போது பாகிஸ்தான் அணிக்கு நீங்கள் தேவை என்றார்.
இம்ரான் கான் தலையிட வேண்டும்
கிரிக்கெட் போர்டு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும். ஆமிர் 27 வயதில் ஓய்வு பெறுவது வீரர்களின் மனநிலையை காட்டுகிறது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என நினைக்கிறேன் என்றார் அக்தர்.
கேள்வி எழுப்பினார்
முகமது ஆமிரின் ஓய்வை தொடர்ந்து ஹசன் அலி, வஹாப் ரியாஸ், ஜுனைத் கான் ஆகியோரும் ஓய்வு பெறலாம். பாகிஸ்தான் அணியில் என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. எப்படி ஆமிர் 27 வயதில் ஓய்வு பெறுவார்? என்று கேள்வி எழுப்பினார் அக்தர்.
மேட்ச் பிக்ஸிங் விவகாரம்
பாகிஸ்தான் அணி அவர் மீது நிறைய நம்பிக்கை வைத்தது. மேட்ச் பிக்ஸிங்கில் இருந்து அவரை மீட்டு தேசிய அணிக்கு அவரை கொண்டு வந்தது. அவர் தற்போது நல்ல பார்மில் இருக்கும் போது ஓய்வு பெறுகிறார் என ஆமிர் நன்றி மறந்ததை சுட்டிக் காட்டினார் அக்தர்.
அக்ரம் ஏமாற்றம்
வாசிம் அக்ரம் கூறுகையில், ஆமீர் ஓய்வு ஆச்சரியம் அளிக்கிறது. 27-28 வயதில் தான் ஒருவர் சிறப்பாக செயல்பட முடியும். டெஸ்ட் கிரிக்கெட் மூலம் தான் ஒருவரை சிறந்த வீரரா இல்லையா என கூற முடியும். ஆஸ்திரேலியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் இங்கிலாந்துடன் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு அவர் தேவை என்றார்.