பெங்களூரு: இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் பும்ரா மற்றும் நட்சத்திர பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர்களில் ஒருவரான பும்ரா, கிட்டத்தட்ட ஓராண்டாக ஓய்வில் இருக்கிறார். இவர் இல்லாமல் இந்திய அணி ஆடிய டி20 உலகக்கோப்பை மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது. இதனால் ஐசிசி தொடர்களில் இந்திய அணி வெற்றிபெற வேண்டும் என்றால் கட்டாயம் பும்ரா இந்திய அணிக்காக களிறங்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

கடைசியாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் பும்ரா விளையாடி இருந்தார். அதன்பின்னர் காயம் காரணமாக ஓய்வில் இருந்த பும்ராவுக்கு கடந்த மார்ச் மாதத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின்னர் குணமடைந்த பும்ரா, தேசிய கிரிக்கெட் அகாடமியில் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒரு நாளிற்கு 7 ஓவர்கள் வரை பந்துவீசி பயிற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும் பும்ரா பந்துவீச்சு பயிற்சியை தொடங்கியதே ரசிகர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது.
அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயரும் 4 மாதங்களுக்கு மேலாக ஓய்வில் இருக்கிறார். வங்கதேச தொடருக்கு பின் காயமடைந்த ஸ்ரேயாஸ் ஐயர், ஐபிஎல் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கூட விளையாடவில்லை. லண்டனில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பின், நீண்ட மாதங்களாக ஓய்வில் இருந்தார். இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயரும் காயத்தில் இருந்து குணமடைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஆகஸ்ட் 18ஆம் தேதி தொடங்கும் அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவரும் தேர்வு செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் பட்சத்தில் ஆசியக் கோப்பை மற்றும் உலகக்கோப்பைத் தொடரின் போது இரு வீரர்களும் நல்ல ஃபார்மில் இருக்க முடியும். இதனால் அயர்லாந்து அணியுடனான டி20 கிரிக்கெட் தொடர் நல்ல பயிற்சி களமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.