கோவை: கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் யாரும் பவுலிங் செய்ய முன் வருவதில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்திருந்தன. இதனால் ஆல் ரவுண்டரை தேடி பிடிக்க வேண்டிய சூழல் பிசிசிஐ-க்கு ஏற்பட்டது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் வந்ததில் இருந்து பேட்ஸ்மேன்களின் மனநிலையில் மாற்றம் வந்துள்ளது.
சூர்யகுமார் யாதவ், ரிங்கு சிங், திலக் வர்மா, ஜெய்ஸ்வால், அபிஷேக் சர்மா உள்ளிட்ட அனைவரும் தொடர்ச்சியாக பவுலிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட கையை சுழற்ற முன் வராத பேட்ஸ்மேன்கள், தற்போது உள்ளூர் கிரிக்கெட்டை பயிற்சிக்கான சரியான களமாக பார்க்க தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளார் நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். புச்சி பாபு தொடருக்கான போட்டியில் மும்பை அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடி வருகிறது. மும்பை அணிக்காக ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் களமிறங்கியதால், கோவையில் ரசிகர்கள் அதிகளவு கூடியிருந்தனர்.
இந்த நிலையில் முதலில் பேட்டிங் ஆடிய தமிழ்நாடு அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 294 ரன்களை குவித்துள்ளது. தமிழக வீரர் பிரதோஷ் ரஞ்சன் பால் 65 ரன்கள் விளாசி அசத்தினார். அதேபோல் நட்சத்திர வீரர் இந்திரஜித்தும் அரைசதம் அடித்தார். முதல் நாள் ஆட்டம் முடிவடைய இருந்த நிலையில், திடீரென ஸ்ரேயாஸ் ஐயர் பவுலிங் செய்ய அழைக்கப்பட்டார்.

அப்போது வந்த ஸ்ரேயாஸ் ஐயர், கேகேஆர் அணியின் ஸ்பின்னரான சுனில் நரைனின் பவுலிங் ஸ்டைலில் பந்துவீசினார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுனில் நரைன் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இருவருமே கேகேஆர் அணிக்காக விளையாடி வருகின்றனர். அவரின் பவுலிங் ஸ்டைலில் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீசியதன் மூலம், நரைன் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்பது புரிய வந்துள்ளது.
https://x.com/105of70Mumbai/status/1828406772727476318
சில மாதங்களுக்கு முன் ரஞ்சி டிராபி தொடருக்கே டிமிக்கி கொடுத்துவிட்ட ஓய்வில் இருந்த ஸ்ரேயாஸ் ஐயர், புச்சி பாபு தொடரில் பவுலிங் செய்வது நல்ல மாற்றமாக பார்க்கப்படுகிறது. இதன் மூலமாக இந்திய டெஸ்ட் அணியில் இழந்த இடத்தை ஸ்ரேயாஸ் ஐயரால் மீண்டும் பிடிக்க முடியும் என்று சொல்லப்படுகிறது.