மும்பை: 2026 ஐபிஎல் தொடர் விரைவில் தொடங்க உள்ள நிலையில், தோனி, ரோஹித் சர்மா மற்றும் கௌதம் கம்பீருக்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஸ் ஐயர்தான் ஐபிஎல் தொடரின் மிகச்சிறந்த கேப்டன் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடரின் வரலாற்றில் சென்னை மற்றும் மும்பை அணிகளுக்காக தலா 5 கோப்பைகளை வென்று தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் ஈடு இணையற்ற கேப்டன்களாக வலம் வருகின்றனர்.
அதேபோல் கௌதம் கம்பீர் கொல்கத்தா அணிக்கு 2012 மற்றும் 2014 ஆகிய ஆண்டுகளில் 2 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இவர்களுக்கு அடுத்தபடியாக, 2024 சீசனில் கொல்கத்தா அணிக்கு 3 ஆவது கோப்பையையும், கடந்த 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டி வரையிலும் அழைத்துச் சென்ற ஸ்ரேயாஸ் ஐயரை பத்ரிநாத் சிறந்த கேப்டன்களின் வரிசையில் இணைத்துள்ளார்.

இது குறித்துப் பேசிய பத்ரிநாத், "ஸ்ரேயாஸ் ஐயரை இப்போதே தோனி மற்றும் ரோஹித் சர்மாவுடன் ஒப்பிடுவது சற்று முன்கூட்டியே கணிப்பதுதான். அவர்கள் இருவரும் ஒரு தனித்துவமான இடத்தில் உள்ளனர். ஆனால், சிறந்த கேப்டன்களின் பட்டியலை நான் தயார் செய்தால் தோனி, ரோஹித் மற்றும் கம்பீருக்கு அடுத்தபடியாக ஸ்ரேயாஸ் ஐயரைத் தான் வைப்பேன்."
"ஐபிஎல் தொடரில் ஒரு அணியை வழிநடத்துவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. ஒருபுறம் ரிக்கி பாண்டிங் போன்ற பயிற்சியாளர்கள், ஆஸ்திரேலிய வீரர்கள், மறுபுறம் இந்திய வீரர்கள், அணி நிர்வாகம் மற்றும் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா என அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஒருங்கிணைத்து ஒரு இளம் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயர் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்" என்று புகழாரம் சூட்டினார்.

ஐபிஎல் தொடரில் இதுவரை 83 போட்டிகளில் கேப்டனாகச் செயல்பட்டுள்ள ஸ்ரேயாஸ் ஐயர், அதில் 48 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார். கடந்த 2025 சீசனில் கேப்டனாக மட்டுமின்றி பேட்ஸ்மேனாகவும் தனி ஆளாக மிரட்டிய அவர், 175.07 ஸ்ட்ரைக் ரேட் மற்றும் 50 க்கும் அதிகமான சராசரியுடன் 604 ரன்களைக் குவித்து பஞ்சாப் அணியின் தூணாகச் செயல்பட்டார். இந்திய டி20 அணிக்குள் அவர் மீண்டும் நுழைவதற்கு இந்த 19 ஆவது ஐபிஎல் சீசன் அவருக்கு மிக முக்கியமானதாக அமையும் என பத்ரிநாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
