கொழும்பு : இந்திய அணியில் நான்காவது வரிசையில் யாரை பேட்டிங் ஆட வைப்பது என்ற பஞ்சாயத்து நீண்ட நெடுங்காலமாக ஓடி, ஒரு வழியாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்துக்கு சரியான வீரராக அமைந்தார்.
தொடர்ந்து அந்த நான்காம் வரிசையில் பேட்டிங் செய்து நன்றாகவே ரன் குவித்தார். ஆனால், இடையில் அவருக்கு முதுகில் சிக்கலான எலும்பு முறிவு ஏற்பட்டது.

அதன் காரணமாக, அவர் ஓய்வு, அறுவை சிகிச்சை, அதில் இருந்து மீண்டு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டிய பயிற்சிகள் என பல மாதங்களாக இந்திய அணி பக்கமே வர முடியாமல் போனது.
நீண்ட நாட்கள் கழித்து உலகக்கோப்பைக்கான இந்திய அணியை தயார் செய்ய முடிவு செய்த பிசிசிஐ, ஸ்ரேயாஸ் ஐயர் விரைவாக இந்திய அணிக்கு திரும்பும் வகையில் அவரை தொடர்ந்து கண்காணித்து, ஆசிய கோப்பை தொடருக்கு அவரை அழைத்து வந்தது.
ஆசிய கோப்பை தொடரில் அவர் நான்காம் இடத்தில் இறங்கி ரன் குவித்து தன்னை நிரூபிப்பார் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் அவர் மீண்டும் முதுகு வலியில் சிக்கி இருக்கிறார்.
ஆசிய கோப்பை தொடரில் இந்தியா ஆடிய முதல் மூன்று போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் அணியில் இடம் பிடித்தும் ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் அவர் 14 ரன்கள் மட்டுமே எடுத்தார். கடைசியாக இந்திய அணி ஆடிய போட்டியில் அவர் முதுகு வலி காரணமாக அணியில் இடம் பெறவில்லை.
அவருக்கு மோசமான பிரச்சனைகள் ஏதும் இல்லை என்றாலும் ஆசிய கோப்பை தொடரில் இன்னும் இந்திய அணிக்கு இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. சூப்பர் 4 சுற்றில் ஒரு போட்டியும், ஆசிய கோப்பை இறுதிப் போட்டியும் மட்டுமே மீதம் உள்ளன.
அதில் ஸ்ரேயாஸ் ஐயர் பங்கேற்று தன் பேட்டிங் திறனை நிரூபிக்க வேண்டும். ஆனால், அடுத்து உலகக்கோப்பை தொடருக்கு முன் இந்தியா கடைசியாக ஆட உள்ள ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி, நாளை அறிவிக்கப்பட உள்ளது. அதே நாளில் தான் இந்திய அணி வங்கதேசத்துக்கு எதிராக ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க உள்ளது.
அதன்படி பார்த்தால், ஸ்ரேயாஸ் ஐயருக்கு தன்னை நிரூபிக்க அந்த ஒரு போட்டி மட்டுமே உள்ளது. அந்தப் போட்டியில் அவர் பங்கேற்பாரா இல்லையா என்பதும் கேள்விக்குறிதான். அவர் முதுகு வலியில் இருந்து மீண்டு விட்டாரா? இல்லையா? என்பதை பொறுத்தே அந்தப் போட்டியிலும் அவர் ஆட முடியும்.
ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம் பெறவில்லை என்றால் அத்துடன் திறனை நிரூபிக்காத அவருக்கு உலகக்கோப்பை தொடரிலும் வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். மேலும், முதுகு வலி இருக்கிறது என்பதை காரணம் காட்டி அவரை வெளியேற்றவும் வாய்ப்பு உள்ளது.
ஆசிய கோப்பை தொடரில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக பாகிஸ்தான் போட்டியில் நான்காம் இடத்தில் களமிறங்கிய கே எல் ராகுல் சதம் அடித்து இருப்பது அவருக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது. காயத்தில் இருந்து மீண்டு வந்தாலும் உச்சகட்ட பார்மில் இருக்கும் ராகுலை அணியை விட்டு நீக்குவது எனது தவறான முடிவாக அமையும் என்பதால் ஸ்ரேயாஸ் ஐயர் நிலை ஊசலாடத் துவங்கி உள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் போது இந்திய அணியில் அவரின் நிலை என்ன என்பது தெளிவாகிவிடும்.