மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான ஸ்ரேயாஸ் ஐயர், ஆசிய கோப்பை டி20 தொடரில் சேர்க்கப்படாதது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்து இருக்கிறது. உலககோப்பை, ஐபிஎல், சாம்பியன்ஸ் கோப்பை தொடர், ரஞ்சி கோப்பை, துலீப் கோப்பை என அனைத்து தொடர்களிலும் ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி வருகிறார்.
அது மட்டுமல்லாமல் ஐபிஎல் தொடரில் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டு மூன்று முறை அணியை இறுதி போட்டிக்கும் அதில் ஒரு முறை கோப்பையையும் வென்று கொடுத்திருக்கின்றார். இப்படி சிறப்பாக செயல்படும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு சமீபத்தில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

இந்த நிலையில் ஆசிய கோப்பை டி20 தொடரில் ஸ்ரேயாஸ் பரிந்துரை செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அதிலும் அவருடைய பெயர் இடம் பெறவில்லை. இதனால் கிரிக்கெட் வல்லுநர்கள் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ள நிலையில், இந்த தருணத்தில் கில், டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார்.
இதனை சுட்டிக்காட்டி உள்ள ரசிகர்கள் அனைத்து பொறுப்பையும் கில்லுக்கே கொடுத்துவிட்டால், மற்ற வீரர்கள் என்ன செய்வார்கள் அவர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேள்வி எழுப்பினர். இந்த நிலையில் இந்திய அணியின் அடுத்த ஒரு நாள் கேப்டனாக ஸ்ரேயாஸ் நியமிக்க பிசிசிஐ ஆலோசித்து வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுகிறாரோ அப்போது கில் பதிலாக ஸ்ரேயாஸ் ஐயருக்கு முன்னுரிமை வழங்க பிசிசிஐ முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. கில், எவ்வாறு சிறப்பாக செயல்படுகிறாரோ, அதேபோல் ஸ்ரேயாஸ் பல சாதனைகளை படைத்து வருவதால் அவருக்கு இந்த கௌரவத்தை அளிக்க முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
அது மட்டுமில்லாமல் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளுக்கும் ஒரே கேப்டன் இருப்பது சரி கிடையாது என்பதால் ஸ்ரேயாஸ் ஐயரை பொறுப்புக்கு கொண்டு வர முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. ரோகித் சர்மா எப்போது ஓய்வு பெறுகிறாரோ அப்போது ஸ்ரேயாஸ் புதிய கேப்டனாக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கலாம்.