மும்பை: சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஆசிய கோப்பைக்கான இந்திய டி20 அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் பெயர் இடம் பெறவில்லை. இந்த நிலையில் திடீரென அவர் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட உள்ளதாக ஒரு தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் அது குறித்து பிசிசிஐ செயலாளர் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். சுப்மன் கில் பற்றியும் அவர் பேசி உள்ளார். இந்திய கிரிக்கெட் அணி அடுத்த தலைமுறைக்கு மெல்ல மெல்ல நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதால் தான் இந்த விவாதம் எழுந்துள்ளது.

டெஸ்ட் அணிக்கு கேப்டன் யார் என்ற கேள்வி ஓய்ந்த நிலையில், இப்போது ஒருநாள் அணிக்கு அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. ரோஹித் சர்மாவின் கேப்டன்சி ஒருநாள் போட்டிகளிலும் முடிவுக்கு வரும் சூழலில், அடுத்த கேப்டனாக யார் வருவார் என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் பட்டிமன்றமே நடந்து வருகிறது. இதில் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் ஆகியோரின் பெயர்கள் தான் அதிகம் உச்சரிக்கப்படுகின்றன.
ஸ்ரேயாஸ் ஐயர் ஐபிஎல் தொடரில் இரண்டு வெவ்வேறு அணிகளை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற திறமையான கேப்டன். அனுபவம், தலைமைப் பண்பு, அதிரடி ஆட்டம் என ஒரு கேப்டனுக்கு தேவையான அத்தனை தகுதிகளும் அவரிடம் இருப்பதால், பலரும் இவர்தான் அடுத்த கேப்டனாக வர வேண்டும் என்று கூறி வந்தனர். சமூக வலைதளங்களில் இதுகுறித்த செய்திகள் காட்டுத்தீயாய் பரவின.
ஆனால், இந்த தகவல்கள் எல்லாம் வெறும் வதந்திதான் என்று பிசிசிஐ ஒரே போடாக போட்டுடைத்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவஜித் சைகியா பேசுகையில், "எனக்கே இது புது செய்தி. ஸ்ரேயாஸ் ஐயரை கேப்டனாக நியமிப்பது குறித்து நாங்கள் எந்த ஆலோசனையும் நடத்தவில்லை" என்று தெளிவாகக் கூறிவிட்டார்.
ரோஹித் சர்மாவுக்கு இப்போது 38 வயதாகிறது. டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து அவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டார். ஒருநாள் போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாடினாலும், 2027 உலகக் கோப்பையின் போது அவருக்கு 40 வயதாகிவிடும். அதனால், அடுத்த கேப்டனை இப்போதே உருவாக்க வேண்டிய கட்டாயத்தில் பிசிசிஐ உள்ளது.
ஸ்ரேயாஸ் ஐயர் இல்லை என்றால், அப்போ யார் அடுத்த கேப்டன்? என்ற கேள்விக்கு, பிசிசிஐ வட்டாரங்கள் சுப்மன் கில்லை நோக்கி கைகாட்டுகின்றன. இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக ஏற்கனவே நியமிக்கப்பட்டு, இங்கிலாந்து தொடரில் வெற்றியும் பெற்றுத் தந்துள்ளார் கில்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் கூறுகையில், "சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் 59 ரன்கள் சராசரி வைத்துள்ளார். ஏற்கனவே அவர் அணியின் துணை கேப்டனாக இருக்கிறார். டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்டு, அதில் வெற்றியும் கண்ட ஒரு இளம் வீரரை விட்டுவிட்டு, வேறு ஒருவரை நாங்கள் எப்படி யோசிப்போம்? நேரம் வரும்போது, சுப்மன் கில் தான் ஒருநாள் அணிக்கும் கேப்டனாக வருவார் என்பதில் சந்தேகமே இல்லை" என்று அடித்துச் சொல்லியுள்ளார்.
ஸ்ரேயாஸ் ஐயரை விட சுப்மன் கில் சுமார் 5 வயது இளையவர். இதனால், நீண்ட காலத்திற்கு இந்திய அணியை வழிநடத்தும் ஒரு கேப்டனாக கில்லை உருவாக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. ஐபிஎல் தொடரிலும் கேப்டனாக அவர் சிறப்பாக செயல்பட்டு வருவது அவருக்கு சாதகமாக அமைந்துள்ளது.
ஆக, ரசிகர்கள் மத்தியில் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் அடிபட்டாலும், பிசிசிஐ-யின் தேர்வு இளம் வீரர் சுப்மன் கில் தான் என்பது இதன் மூலம் தெளிவாகத் தெரிகிறது. இப்போதைக்கு, வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ரோஹித் சர்மாதான் கேப்டனாக நீடிப்பார். அதன்பிறகு கேப்டன்சி மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம்.