நன்றாக விளையாடியும் அணியில் இடமில்லை....”பெர்பார்மென்ஸ்” பாதிக்கிறது என்கிறார் ஸ்ரேயாஸ் ஐயர்
பெங்களூர் : நன்றாக ரன் குவித்தும் இந்திய அணிக்கு தேர்வாகாமல் இருப்பது தன் செயல்திறனை பாதிப்பதாக கூறியிருக்கிறார் இந்தியா “ஏ” அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்.
ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக ரன் குவித்து வருகிறார். இந்திய அணியில் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் அவ்வப்போது சேர்க்கப்பட்டாலும், இன்னும் அவருக்கு உறுதியான இடம் கிடைக்கவில்லை. கடைசியாக பிப்ரவரி மாதம் தென்னாபிரிக்கா அணிக்கு எதிராக ஒருநாள் போட்டியில் ஆடியிருந்தார்.

கடந்த வருடங்களில், முதல் தர போட்டிகள், இந்தியா “ஏ”, ஐபிஎல் தொடர் ஆகியவற்றில் ரன் குவித்து தன்னை நிரூபித்து இருக்கிறார். அவரது திறமை மற்றும் அனுபவம் மீது நம்பிக்கை வைத்து கடந்த ஐபிஎல் தொடரில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இது பற்றி பேசிய ஸ்ரேயாஸ் ஐயர், “பொறுமையாக இருப்பது மிகவும் கடினம். நீங்கள் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியும், ரன் குவித்தும் தேசிய அணியில் இடம் கிடைக்காவிட்டால், அது உங்கள் மனதில் ஓடும். ஒரு நல்ல பந்துவீச்சை எதிர்கொள்ளும் போது, உங்கள் செயல்திறன் நிலையற்றுப் போகும். எனவே, நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். சில சமயம் அது உங்களை பாதிக்கும்” என்றார்.
இந்திய அணி இங்கிலாந்தில் இன்னிங்க்ஸ் தோல்வி தழுவிய நிலையில், நேற்று ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா “ஏ” அணி, தென்னாபிரிக்கா “ஏ” அணிக்கு எதிரான நான்கு நாள் டெஸ்ட் தொடரை கைப்பற்றி இருக்கிறது. இந்த தொடரின் இரண்டு போட்டிகளில் முதல் போட்டியில் இன்னிங்க்ஸ் மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி மழையால் டிரா ஆனது.
இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளை இழந்துள்ள நிலையில், இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டிகளில் புதிய வீரர்களை சேர்க்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, தற்போது இந்தியா “ஏ” அணியில் ஆடி வரும் வீரர்களில் சிலருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
Story first published: Tuesday, August 14, 2018, 18:04 [IST]
Other articles published on Aug 14, 2018


Click it and Unblock the Notifications