மும்பை: 2025 ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியை ஸ்ரேயாஸ் ஐயர் இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றார். மேலும், ஐபிஎல் தொடரில் மூன்று வெவ்வேறு அணிகளை இறுதிப்போட்டி வரை அவர் அழைத்துச் சென்று இருக்கிறார் என்பதால், அவரை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்து இருக்கின்றன. அவரை இந்திய ஒருநாள் அணி மற்றும் வருங்காலத்தில் டி20 அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என பலரும் கூறி வருகின்றனர். அதற்கான அனுபவமும், தலைமைப் பண்பும் அவரிடம் உள்ளது.
ஆனால், தற்போது இந்திய அணி வட்டாரத்தில் ஒரு அதிர்ச்சி தகவல் வலம் வருகிறது. அதன்படி, ரோகித் சர்மாவை ஒருநாள் அணியில் இருந்து ஒட்டுமொத்தமாக நீக்குவது குறித்த ஆலோசனை நடந்து வருவதாகவும், அவர் ஒருநாள் அணியிலும் புறக்கணிக்கப்படுவார் எனவும் கூறப்படுகிறது.

ரோகித் சர்மா இல்லாத நிலையில், இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஸ்ரேயாஸ் ஐயரை நியமிப்பார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்து வரும் நிலையில், சுப்மன் கில் தான் கேப்டனாக நியமிக்கப் போகிறார்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டார்.
சுப்மன் கில் டெஸ்ட் போட்டிகளில் மிகவும் சராசரியாக விளையாடி வருகிறார். அவரது பேட்டிங் சராசரி 35 என்பதாகத்தான் இருக்கிறது. அப்படி இருந்தும் அவரை கேப்டனாக நியமித்திருக்கிறது இந்திய அணி நிர்வாகம். இந்த நிலையில், ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில்லை கேப்டனாக நியமிக்க திட்டங்கள் நடந்து வருகிறது என்கின்றனர்.
ஒருநாள் அணியைப் பொறுத்தவரை சுப்மன் கில் இதுவரை சிறப்பான ஆட்டத்தை ஆடியிருக்கிறார். ஆனால், ஸ்ரேயாஸ் ஐயருடன் ஒப்பிடும்போது, சுப்மன் கில்லின் தலைமைப் பண்பு நிச்சயம் கேள்விக்குரியதாகவே இருக்கும். வீரர்கள் மத்தியில் சுப்மன் கில்லை கேப்டனாக ஏற்றுக்கொள்ளும் மனநிலை உள்ளதா? என்ற கேள்வி உள்ளது.
ஏனெனில், ஒருநாள் அணியைப் பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா, பும்ரா, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், முகமது ஷமி என சுப்மன் கில்லை விட அதிக அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பார்கள். டெஸ்ட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலியை வெளியேற்றிய நிலையில், அவர் தற்போது பும்ரா, ரிஷப் பண்ட், ரவீந்திர ஜடேஜா, கே.எல். ராகுல் போன்ற மூத்த வீரர்களுக்கு கேப்டனாகச் செயல்பட வேண்டிய நிலை உள்ளது.
அதை கில் சரியாக செய்தால், இங்கிலாந்து தொடரை இந்திய அணி கைப்பற்றினால், அப்போது சுப்மன் கில் ஒருநாள் அணியின் கேப்டனாக வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், சுப்மன் கில்லை ஒருநாள் அணியின் கேப்டனாக நியமித்தால் அது பல்வேறு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.