மும்பை: இந்திய கிரிக்கெட்டில் ஒரு முக்கியத் தலைமுறை மாற்றம் நிகழ்ந்துள்ளது. டெஸ்ட் அணியின் கேப்டனாக வெற்றிகரமாக வலம் வரும் 26 வயதான சுப்மன் கில், தற்போது இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கு கில் கேப்டனாக செயல்படுவார் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தேர்வுக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி ஆகியோர் கில்லின் தலைமையில் வீரர்களாக அணியில் தொடர்வார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2027-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெற உள்ள ஐசிசி உலகக்கோப்பையை மனதில் வைத்து, இப்போதிருந்தே ஒரு இளம் அணியைக் கட்டமைக்கும் நோக்கில் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தேர்வுக்குழுவினர், டெஸ்ட் கேப்டனான கில்லிடம் இதுகுறித்து பேசியுள்ளனர். நீண்ட காலத் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2027 உலகக்கோப்பையில் இந்திய அணியை அவர்தான் வழிநடத்த வேண்டும் என்ற தங்களது விருப்பத்தை அவரிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த கேப்டன்சி மாற்றம் குறித்து, அணியின் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் கம்பீருக்கும் தேர்வுக்குழு தகவல் தெரிவித்துள்ளது. 38 வயதான ரோஹித் சர்மாவிடமிருந்து, அவரை விட 12 வயது இளையவரான சுப்மன் கில்லுக்கு கேப்டன் பொறுப்பு கைமாறுவது, இந்திய கிரிக்கெட்டில் ஒரு புதிய அத்தியாயத்தின் தொடக்கமாகப் பார்க்கப்படுகிறது.
டெஸ்ட் கேப்டனாக தனது முதல் தொடரிலேயே சுப்மன் கில் முத்திரை பதித்தார். இங்கிலாந்துக்கு எதிராக அனல் பறந்த 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், 75.40 என்ற அபார சராசரியுடன் 4 சதங்கள் உட்பட 754 ரன்களைக் குவித்தார். அந்த ஆண்டர்சன்-டெண்டுல்கர் கோப்பைக்கான தொடர் 2-2 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. டி20 அணியிலும் தனது பஞ்சாப் அணி வீரரான அபிஷேக் சர்மாவுடன் தொடக்க வீரராகக் களமிறங்கி முக்கியப் பங்காற்றி வருகிறார்.
ஒருநாள் போட்டிகளில் கில்லின் புள்ளிவிவரங்கள் பிரமிக்க வைக்கின்றன. இதுவரை 55 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 59.04 என்ற சராசரியில் 2775 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 8 சதங்களும் அடங்கும். குறிப்பாக, 2023-ல் நியூசிலாந்துக்கு எதிராக ஹைதராபாத்தில் அவர் அடித்த 208 ரன்கள், அவரது திறமைக்குச் சான்றாகும்.
ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியின் திட்டங்களில் தொடர்ந்து நீடிப்பார்கள் என்று தேர்வுக்குழு கூறி உள்ளது. சுமார் எட்டு மாத கால இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேசப் போட்டிக்குத் திரும்புகின்றனர். கடைசியாக, துபாயில் நடந்த சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றபோது இருவரும் அணியில் இருந்தனர்.
ரோஹித் சர்மா தனது கேப்டன்சியில் டி20 உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி என இரண்டு ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார். இருப்பினும், சமீபகாலமாக ரன்கள் குவிக்கத் தவறியதால், அவர் டெஸ்ட் கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இதுவே சுப்மன் கில் டெஸ்ட் கேப்டனாக உயர வழிவகுத்தது. தற்போது ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பும் கில்லின் கைகளுக்கு வந்துள்ளது. அதேநேரம், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகத் தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.