மும்பை: டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாக சுப்மன் கில் பெற்றுள்ள முதல் வெற்றி, இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு அவர் சரியானவரா என்ற விவாதத்தை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள நிலையில், சுப்மன் கில், தற்போதைய ஒருநாள் அணி கேப்டன் ரோஹித் சர்மாவின் இடத்தைப் பிடிப்பார் என்ற தகவல் பரவி வருகிறது.
பிரபல விளையாட்டு ஊடகம் ஒன்றில் வெளியாகி இருக்கும் தகவலின்படி, 2027 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என்றும், எதிர்காலத்தில் கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால், ரோஹித் சர்மா எவ்வளவு காலம் தனது கேப்டன் பதவியை தக்க வைத்துக் கொள்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஆண்டு அக்டோபரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் சுப்மன் கில் இந்தியாவை வழிநடத்துவார் என்ற தகவலும் கூறப்படுகிறது.

2024 டிசம்பரில் பார்டர்-கவாஸ்கர் டிராபியின் ஐந்தாவது டெஸ்டில் இருந்து ரோஹித் விலகியபோதே இந்த விவாதம் தொடங்கியது. அதுவே இந்திய டெஸ்ட் கேப்டனாக அவரது கடைசி போட்டியாக அமைந்தது. 2024 டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோஹித், ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து விளையாட விருப்பம் தெரிவித்தார்.
இருப்பினும், இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான அணி அறிவிக்கப்படுவதற்கு முன்பு, பிசிசிஐ தேர்வுக் குழுவினர் அவரை டெஸ்ட் கேப்டன் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்ததாக செய்திகள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து அவர் டெஸ்ட் வடிவத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு பதில் சொல்லும் வகையில், தென்னாப்பிரிக்காவில் 2027-ல் நடைபெறவுள்ள உலகக் கோப்பையில் கோப்பை வெல்ல வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார் ரோஹித் சர்மா. அதற்காக ரோஹித் தன்னை உடற்தகுதியுடன் வைத்திருக்க முயற்சித்து வருகிறார்.
மறுபுறம், சுப்மன் கில் ஒருநாள் போட்டிகளில் தன்னை ஒரு சிறந்த தொடக்க ஆட்டக்காரராக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார். இங்கிலாந்தில் அவரது டெஸ்ட் கேப்டன்சி, களத்தில் எடுக்கும் முடிவுகள் மற்றும் வீரர்களுடனான வெளிப்படையான தொடர்பு ஆகியவை பாராட்டை பெற்று உள்ளது.
ஒருநாள் போட்டி கேப்டன் பதவிக்கு ஸ்ரேயாஸ் ஐயரின் பெயரும் பரிசீலிக்கப்படுகிறது. ஐபிஎல் போட்டிகளில் அவரது கேப்டன்சி வெற்றி அவரை ஒரு வலுவான போட்டியாளராக முன்னிறுத்துகிறது. இந்த விவாதங்கள் சூடுபிடித்தாலும், பிசிசிஐயிடம் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை.