பெங்களூரு : ஐபிஎல் கிரிக்கெட் தொடரிலிருந்து ஆர்சிபி அணி வெளியேறியது. குஜராத் அணியின் சுப்மன் கில் தொடர்ந்து 2வது முறையாக சதம் விளாசியதால், ஆர்சிபி அணி பெரிய இலக்கை நிர்ணயித்தும் தோல்யை தழுவியது.
பெங்களூரு அணி தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்றதன் மூலம் மும்பை அணி, பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆர்சிபி அணிக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணியில் விராட் கோலி தனி ஆளாக போராடி, ரன்களை சேர்த்தார். ஆனால் மற்ற வீரர்கள் யாரும் அவருக்கு துணை நிற்கவில்லை. டுபிளசிஸ் 19 பந்துகளில் 28 ரன்கள் சேர்க்க, மேக்ஸ்வெல் 11 ரன்களில் வெளியேற, மஹிபால் லோம்ரர் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். ஒரு முனையில் விக்கெட் இழந்தாலும் மறுமுனையில் அதிரடியாக விளையாடி 35 பந்துகளில் விராட் கோலி அரைசதம் அடித்தார்.
கோலிக்கு உறுதுனையாக நின்ற பிராஸ்வெல் 5 பவுண்டரிகளை அடித்து 26 ரன்கள் சேர்த்து வெளியேறினார். தினேஷ் கார்த்திக் 17வது முறையாக டக் அவுட்டாகி ரசிகர்களை வெறுப்பேற்றினார். எனினும் விராட் கோலி தனி ஆளாக நின்று 61 பந்துகளில் சதம் எடுத்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 7 சதம் அடித்து, இதன் மூலம் ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது.

198 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் சாஹா 12 ரன்களில் ஆட்டமிழக்க, மற்றொரு தொடக்க வீரரான சுப்மன் கில், ஆர்சிபிக்கு தனது பேட் மூலம் தக்க பதிலடி கொடுத்தார். விஜய் சங்கர் 35 பந்தில் 53 ரன்கள் சேர்த்தார். ஷனாகா டக் அவுட்டாகியும், டேவிட் மில்லர் 6 ரன்களிலும் ஆட்டமிழக்க, ஆர்சிபி க்கு வெற்றி வாய்ப்பி உருவானது.
ஆனால், சுப்மன் கில் , தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி சிக்சர்களை அடுத்தடுத்து விளாசினார். இதனால் ஆர்சிபி நிலைக்குலைந்து போனது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்ற கில் 52 பந்தில் 104 ரன்களை குவித்தார். இதில் 8 சிக்சர்களும், 5 பவுண்டரிகளும் அடங்கும். இதன் மூலம் 5 பந்துகள் எஞ்சிய நிலையில், குஜராத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சுப்மன் கில்லும் கோலி போல், தொடர்ந்து 2 சதம் அடித்து அசத்தினார்.