பார்படாஸ்: உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்னும் இரண்டு மாதங்களில் தொடங்கவுள்ள நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில்லின் பேட்டிங் ஃபார்ம் ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் முடிவடைந்த ஐபிஎல் தொடரில் 17 போட்டிகளில் விளையாடி 890 ரன்களை விளாசினார் சுப்மன் கில். இதன் மூலம் சுனில் கவாஸ்கர்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலிக்கு பின் இந்திய அணியின் பேட்டிங்கை தாங்குவது சுப்மன் கில் தான் என்று ரசிகர்கள் பாராட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் இரட்டை சதம், சதம் என்று அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் வெளுத்து வாங்கினார்.

ஆனால் ஐபிஎல் தொடருக்கு பின் சுப்மன் கில் விளையாடிய 3 டெஸ்ட் போட்டிகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மோசமான பேட்டிங்கையே வெளிப்படுத்தி வருகிறார். ஒருமுறை கூட 30 ரன்களை கடக்க முடியாமல் சுப்மன் கில் ஆட்டமிழந்து வருவது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியது. இதனால் சுப்மன் கில் தொடக்க வீரராக களமிறங்க வேண்டுமா என்று ரசிகர்கள் விவாதிக்க தொடங்கினார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஆசியாவுக்கு வெளியில் சுப்மன் கில் ஒருமுறை கூட சரியாக பேட்டிங் செய்யவில்லை. கடைசியாக ஆஸ்திரேலிய மண்ணில் ஆடிய காபா டெஸ்ட் போட்டியில் மட்டுமே அரைசதம் விளாசினார். அதன்பின் ஆசியாவுக்கு வெளியில் 30 ரன்களை கூட சுப்மன் கில் கடக்கவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் சுப்மன் கில் நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் முதல் ஒருநாள் போட்டியில் 7 ரன்களில் ஆட்டமிழந்த சுப்மன் கில், இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெறும் 34 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறியுள்ளார். இதனால் சுப்மன் கில் ஆசியாவுக்கு வெளியில் விளையாட கற்றுக் கொள்ள வேண்டும் என்றும், பிளாட் டிராக்களில் மட்டும் பேட்டிங் செய்தால் போதாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் மறுமுனையில் தொடக்க வீரராக களமிறங்கி வரும் இஷான் கிஷன், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 ஒருநாள் போட்டிகளிலும் 2 அரைசதங்களை விளாசி தன்னை நிரூபித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்கு டாப் ஆர்டரில் இடதுகை பேட்ஸ்மேன்கள் இல்லாததால், சுப்மன் கில்லை மாற்றிவிட்டு இஷான் கிஷனை தேர்வு செய்யவும் வாய்ப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது.