மும்பை : இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், தற்போது உலக சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் அடித்த கில், அதன் பிறகு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தடுமாறினார்.
மேலும் தொடக்க வீரராக களம் இறங்கிய இசான் கிஷன் சிறப்பாக விளையாடியதால் கில்லின் இடத்திற்கு ஆபத்து வந்துவிடுமோ என அவரது ரசிகர்களும் அஞ்சினர்.

ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது ஆட்டத்தில் கில் தன்னுடைய திறமையை மீண்டும் நிரூபித்தார். 92 பந்துகளை எதிர்கொண்ட கில் 85 ரன்கள் சேர்த்தார். இதில் 11 பவுண்டரிகள் அடங்கும். இதன் மூலம் சுப்மன் கில் ஒரு சாதனை படைத்திருக்கிறார். அதன்படி சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட்டில் 27 போட்டிகளுக்குப் பிறகு அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை கில் படைத்திருந்தார்.
கில் தற்போது 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 1437 ரன்கள் அடித்திருக்கிறார். இதற்கு முன்பு இந்த சாதனையை பாகிஸ்தான் வீரர் இமாம் உல் அக் படைத்திருந்தார். இமாம் உல் ஹக் 27 போட்டிகளில் 1382 ரன்கள் அடித்திருந்தார். இதே போன்று தென்னாப்பிரிக்க வீரர் வேண்டர் டூசன் 27 போட்டிகளில் களமிறங்கி 1353 ரன்களும் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஜனார்த்தன் டிராட் 1342 ரன்கள் அடித்து இருந்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் கில் நேற்றைய ஆட்டத்தில் சதம் அடித்திருந்தால் இன்னும் ஒரு மிகப்பெரிய சாதனை படைத்திருப்பார். ஆனால் அது 15 ரன்கள் மிஸ் ஆகிவிட்டது. கில் 27 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி நான்கு சதம் 6 அரை சதம் அடித்திருக்கிறார். இந்த நிலையில் நேற்றைய ஆட்டத்தில் மட்டும் கில் சதம் அடித்திருந்தால் ஒரு நாள் கிரிக்கெட் அதிவேகமாக 5 சதம் அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றிருப்பார்.
தற்போது கில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டி20 தொடருக்கு தயாராகி வருகிறார். ஆனால் அந்த தொடரில் கடைசி இரண்டு ஆட்டங்களில் அவருக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. கில் தற்போது ஆசிய கோப்பை தொடருக்கும் உலகக் கோப்பை தொடரிலும் தன்னுடைய திறமையை நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.