லண்டன் : உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில், 13 ரன்கள் எடுத்திருந்த போது போல்ட் ஆனார். சுப்மன் கில், இந்திய அணியின் அடுத்த விராட் கோலி என்று எல்லாம் ரசிகர்கள் அழைத்தனர்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம், ஐபிஎல் தொடரில் 3 சதம் என சுப்மன் கில் பட்டையை கிளப்பினார். ஆனால், அப்போதே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் டெஸ்ட் கிரிக்கெட்டில் எப்படி செயல்படுகிறார் என்பதை பொருத்தே, அவருடைய மகிமை தெரிய வரும் என்று பலரும் தெரிவித்துள்ளனர்.

மேலும், டெஸ்ட் கிரிக்கெட், டி20 யை விட முற்றிலும் வித்தியாசமான போட்டி என்பதால், கில்லை ஜாம்பவான்களுடன் ஒப்பிட வேண்டாம் என்று பலரும் கூறி வந்தனர். இந்த நிலையில், சுப்மன் கில் 2 பவுண்டரிகளை அபாரமாக அடித்தார்.
இதனால், கில் இன்றைய போட்டியிலும் சதம் அடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் ஆஸ்திரேலிய வீரர் போலாந்த், சிறப்பாக காய் நகர்த்தி கில்லின் விக்கெட்டை வீழ்த்தினார். கில்லின் ஆப் ஸ்டம்பை குறி வைத்து தொடர்ந்து பந்துவீசினார். அடுத்து 4வது பந்தில் கொஞ்சம் நகர்த்தி பந்தை வீசினார். அப்போது அந்த பந்து பவுன்ஸ் ஆகி மேலே சென்றுவிடும் என கில் தவறாக கணித்தார்.
ஆனால் பந்து கில்லின் ஆப் ஸ்டம்பை பதம் பார்த்தது. போலாந்த் இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இதில் 25 விக்கெட்டுகள் வலது கை பேட்ஸ்மேன்கள் ஆவார். இதனால் இந்திய பிளேயிங் லெவனில் ஒருவர் மட்டுமே இடதுகை பேட்ஸ்மேன் என்பதால், போலந்து அபாரமாக பந்துவீசி நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுப்மன் கில், இதிலிருந்து பாடம் கற்று மீண்டும் தன்னுடைய திறமையை டெஸ்ட் கிரிக்கெட்டிலும் காட்டி, இங்கிலாந்தில் வெற்றி கொடி காட்ட வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு. ஆனால், அந்த மாற்றத்தை 2வது இன்னிங்சிலே சுப்மன் கில் செய்வாரா என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.