லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 3வது நடுவரின் முடிவை விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவிட்ட சுப்மன் கில்லுக்கு போட்டிக்கான ஊதியத்தில் 15 சதவீதம் அபராதம் விதித்து ஐசிசி நடவடிக்கை எடுத்துள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மீண்டும் படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்திய அணியை 209 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலம் ஆஸ்திரேலிய அணி, அனைத்து வகையான ஐசிசி தொடர்களையும் வென்ற முதல் கிரிக்கெட் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால், இந்திய வீரர்கள் மீது ரசிகரக்ள் கடுமையான விமர்சனங்களை வைத்து வருகின்றனர்.

இதனிடையே ஆஸி. அணியின் ரிக்கி பாண்டிங், 3வது நடுவரின் முடிவை வெளிப்படையாக சமூக வலைதளங்களில் விமர்சித்த இந்திய வீரர் சுப்மன் கில்லை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் அல்லது அவருக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனிடையே டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை சொந்தமாக்கிய ஆஸ்திரேலியாவுக்கு ரூ.13.25 கோடியும், 2வது இடத்தை பெற்ற இந்தியாவுக்கு ரூ.6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், லண்டன் ஓவலில் நடந்த ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மெதுவாக பந்து வீசியதால் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. இந்தியா அணிக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும், ஆஸ்திரேலியா அணிக்கு போட்டி கட்டணத்தில் 80 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த அபராதத்தை ஐசிசியின் ஆட்ட நடுவர் ரஞ்சன் மடுகலே விதித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் சுப்மன் கில் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 100 சதவீதமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ள நிலையில், சுப்மன் கில்லுக்கு கூடுதலாக 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சுப்மன் கில்லுக்கு மொத்தமாக 115 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை இழந்த கவலையில் உள்ள இந்திய வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள சம்பவம் மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.