அகமதாபாத்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் களமிறங்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு கேப்டன் ரோகித் சர்மா பதில் அளித்துள்ளார்.
உலகக்கோப்பை தொடருக்கு முன்பாகவே நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதனால் சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியிலும், டெல்லியில் நடைபெற்ற ஆஃப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை. சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக போட்டியில் இந்திய அணி நாளை களமிறங்கவுள்ளது. இந்த போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடக்கவுள்ளதால், ரசிகர்கள் பலரும் சுப்மன் கில் விளையாட வேண்டும் என்று விவாதித்து வந்தனர். ஏனென்றால் அகமதாபாத் மைதானத்தில் மட்டும் நடப்பாண்டில் சுப்மன் கில் 2 சதங்கள் மற்றும் 6 அரைசதங்களை விளாசி இருக்கிறார். இதனால் பீஸ்ட் ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதனிடையே சென்னையில் இருந்து சிகிச்சை முடிந்து அகமதாபாத் புறப்பட்ட சுப்மன் கில், அன்றைய தினமே ஒரு நேரத்திற்கும் அதிகமாக பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டார். இதனால் இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் சுப்மன் கில் நிச்சயம் கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்களிடையே நம்பிக்கை ஏற்பட்டது. இருப்பினும் சுப்மன் கில் விவகாரத்தில் இந்திய அணி நிர்வாகம் எந்த அவசரமும் காட்டவில்லை.

ஏனென்றால் ஃபிட்னஸ் இல்லாமல் சுப்மன் கில் களமிறங்கி காயத்தில் சிக்கினால், இந்திய அணிக்கு மேலும் பின்னடைவு ஏற்படும். இந்த நிலையில் பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியை முன்னிட்டு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்கு, நாளைய ஆட்டத்தில் சுப்மன் கில் 99 சதவிகிதம் விளையாடுவார். ஆனால் பிளேயிங் லெவனில் இருப்பாரா என்பதை அறிய நாளை வரை காத்திருங்கள் என்று தெரிவித்துள்ளார்.