IND vs AUS: நாளை சுப்மன் கில் விளையாடுவாரா? மாட்டாரா? வெளிப்படையாக சொன்ன கேப்டன் ரோகித் சர்மா!
சென்னை: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியில் சுப்மன் கில் விளையாடுவாரா என்ற கேள்விக்கு இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா வெளிப்படையாக பதில் அளித்துள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தீவிரமாக பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். வலிமையான ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி உலகக்கோப்பை தொடரை சிறப்பாக தொடங்க வேண்டும் என்று இந்திய அணி முயன்று வருகிறது.

ஆனால் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சுப்மன் கில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் நாளைய ஆட்டத்தில் சுப்மன் கில் பங்கேற்பதில் சிக்கல் இருப்பதாக தகவல் வெளியாகியது. இந்த நிலையில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆசிய போட்டிகளில் தங்கம் வென்ற இந்திய அணி பற்றிய கேள்விக்கு, ஆசிய போட்டிகள் இந்திய கிரிக்கெட் அணி தங்கம் வென்றது நமது நாட்டிற்கு மிகப்பெரிய தருணம் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து சுப்மன் கில் பற்றிய கேள்விக்கு, சுப்மன் கில் 100 சதவிகித உடல் தகுதியுடன் இல்லை. அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எந்த காயமும் ஏற்படவில்லை. அவரை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அவர் காய்ச்சலில் இருந்து குணமடைவதற்கு அனைத்து உதவிகளையும், வாய்ப்பையும் வழங்குகிறோம். அதனால் ஆஸ்திரேலிய போட்டியில் இருந்து சுப்மன் கில் இதுவரை விலகவில்லை. அவர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டது வருத்தமளிக்கிறது.
அதேபோல் நான் கேப்டன் என்பதை விடவும் முதலில் ஒரு மனிதன். அதனால் அவர் முதலில் முழுமையாக குணமடைய வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு கேப்டனாக கில்லின் உடல்நிலையை அணுகவில்லை. கில் நாளைய ஆட்டத்தில் விளையாட வேண்டும் என்று நினைக்கவில்லை. அவர் குணமடைய வேண்டும் என்று சக மனிதனாக விரும்புகிறேன். அவர் இளம் வீரர் என்பதோடு, ஃபிட்டான வீரர். அதனால் விரைவில் குணமடைவார் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications