மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் மிகப்பெரிய மாற்றம் நடைபெற உள்ளது. இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணை கேப்டனாக இரண்டு இளம் வீரர்களை நியமிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய டெஸ்ட் அணியில் இருந்து ரோகித் சர்மா விலகியதோடு, டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வையும் அறிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து விராட் கோலியும் பிசிசிஐ-யிடம் தெரிவித்திருக்கிறார். அவர் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடவில்லை. இது ஒரு புறம் இருக்க, இந்தியா 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த இரண்டு ஆண்டு காலத்திற்கும் இந்திய டெஸ்ட் அணி ஒரே கேப்டனின் தலைமையில் தான் விளையாட வேண்டும் என்பதில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் உறுதியாக இருக்கிறார்.

இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவிக்கு ஜஸ்பிரித் பும்ரா தகுதியானவர் என்றாலும், அவருக்கு காயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அவர் வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நீண்ட டெஸ்ட் தொடர்களின் இடையே அவருக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால், அவருக்கு இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியை அளிக்க வேண்டாம் என பிசிசிஐ முடிவெடுத்திருக்கிறது.
எனவே, சுப்மன் கில்லை இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பது குறித்து முடிவு எட்டப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ரிஷப் பண்ட் இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட இருக்கிறார். குறிப்பாக ஐபிஎல் தொடரில் கேப்டனாக செயல்பட்டு வரும் சுப்மன் கில் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் செயல்பாடுகளை கணக்கில் எடுத்துக் கொண்டே இந்த முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
இதை அடுத்து, ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரண்டு ஜாம்பவான்களின் இடத்தை இந்திய டெஸ்ட் அணி எப்படி நிரப்பப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே சமயம் இந்திய அணி அடுத்த தலைமுறை நோக்கி நகரத் துவங்கியிருக்கிறது.