கொல்கத்தா: இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டிருப்பது சரியான முடிவு தான் என முன்னாள் இந்திய அணி கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வென்ற நிலையில் தற்போது கில் அந்த பொறுப்புக்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்.
கில், தலைமையிலான இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான கங்குலி வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர்,"ரோகித் சர்மாவிடம் இது குறித்து நிச்சயம் தேர்வு குழுவினர் பேசி இருப்பார்கள். இதை நீக்கம் என்று நாம் எடுத்துக் கொள்ள முடியாது. இரு தரப்பினரும் பேசி சுமுகமான முடிவையே எடுத்திருப்பார்கள். ரோகித் சர்மா இந்திய அணியின் மிகச்சிறந்த கேப்டனாக இருந்திருக்கிறார்."
"டி20 உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை என அவர் இந்தியாவுக்கு பல கோப்பைகளை வென்று கொடுத்திருக்கிறார். ரோகித்தை பொறுத்தவரை அவருடைய செயல்பாடு ஒரு பிரச்சனையே கிடையாது. ஆனால் 2027 ஆம் ஆண்டு ரோஹித் சர்மாவுக்கு 40 வயதாகிவிடும். அது கிரிக்கெட்டை பொறுத்தவரை நிச்சயம் பெரிய வயது தான். இது எனக்கும் நடந்திருக்கிறது."
"இது ராகுல் டிராவிட்டுக்கும் நடந்திருக்கிறது. ஏன் அனைவருக்குமே இது போல் ஒரு சம்பவம் நடந்திருக்கும். அவ்வளவு ஏன் சுப்மன் கில்லும் 40 வயதை நெருங்கினால், நிச்சயம் இதை எதிர்கொள்வார். விளையாட்டில் அனைவரும் முடிவை ஒரு நாள் எட்டி தான் ஆக வேண்டும். கில், கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பது நிச்சயம் ஒரு மோசமான முடிவு கிடையாது."
"இங்கிலாந்து மண்ணில் தனது திறமையை நிரூபித்திருக்கிறார். இதனால் அவரை கேப்டனாக நியமித்திருப்பது ஒரு நல்ல முடிவு என்று தான் நினைக்கின்றேன். கில் கேப்டனாக வளரும் வரை ரோகித் சர்மா தொடர்ந்து அணியில் விளையாட வேண்டும். அதே சமயம் விராட் கோலியும் ரோகித் சர்மாவும் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவு விளையாட வேண்டும். ஐபிஎல் தொடருக்கு பிறகு இரண்டு மாதம் ஓய்வுக்கு பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு திரும்புவது என்பது சாதாரண விஷயம் கிடையாது."
"அது நிச்சயம் நெருக்கடியை ஏற்படுத்தும். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் நீங்கள் விளையாடி உங்களுடைய உடல் தகுதியை மெருகேற்றிக் கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தை நீங்கள் தொடர்ந்து செய்யவில்லை என்றால் அதில் நீங்கள் மேன்மை பெற மாட்டீர்கள். அது வாழ்க்கையில் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கிரிக்கெட்டுக்கு அதில் விதிவிலக்கு கிடையாது. எனவே தொடர்ந்து விளையாடுங்கள். தொடர்ந்து பயிற்சி செய்யுங்கள். தொடர்ந்து இந்தியாவுக்காக நன்றாக செயல்படுங்கள்" என்று கங்குலி கூறியுள்ளார்.
கங்குலி பிசிசிஐ தலைவராக இருந்த போது தான், விராட் கோலி ஒருநாள் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். தற்போது ரோகித்துக்கும் அதே நிகழ்ந்திருப்பதை நல்ல முமுடிவு என்று கங்குலி வரவேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 19ஆம் தேதி தொடங்குகிறது.