அகமதாபாத்: 2026 ஐபிஎல் சீசன் தொடங்குவதற்கு முன்பாக, குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் சுப்மன் கில் விமர்சகர்களுக்கு கடும் பதிலடி கொடுத்துள்ளார். 2026 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தனக்கு இடம் கிடைக்காதது குறித்து எழுப்பப்பட்ட கேள்வியை அடுத்து அவர் தனது முந்தைய ஐபிஎல் ரன் குவிப்பை சுட்டிக்காட்டி பதிலடி அளித்தார்.
இதுபற்றி ஐபிஎல் தொடருக்கு முந்தைய குஜராத் டைட்டன்ஸ் அணியின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கில், தான் யாருக்கும் எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 3 அல்லது 4 ஐபிஎல் சீசன்களைக் கணக்கிட்டுப் பார்த்தால், தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரர் நான்தான். எனவே, இந்த சீசனில் நான் யாருக்கும் என் திறமையை நிரூபிக்க வேண்டிய அவசியம் இருப்பதாகக் கருதவில்லை" என்று கூறினார்.

புள்ளிவிவரங்களின்படி, 2022-ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் 2449 ரன்களைக் குவித்துள்ளார். அவரது சராசரி 46.2 ஆகவும், ஸ்ட்ரைக் ரேட் 149.78 ஆகவும் உள்ளது. இந்த காலகட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விராட் கோலி 2378 ரன்களுடன் கில்லுக்கு அடுத்த இடத்தில் உள்ளார். மற்ற இளம் வீரர்களான அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் மற்றும் இஷான் கிஷன் ஆகியோரை விட கில் அதிக ரன்களைப் பெற்று சிறந்து விளங்குகிறார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக தனது கடமை குறித்துப் பேசிய கில், "கடந்த 4 ஆண்டுகளாக இந்த அணியில் நான் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறேன். அணியாகவும் நாங்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். இதேபோன்ற சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், விரைவில் மீண்டும் ஒருமுறை ஐபிஎல் கோப்பையை நாங்கள் கைப்பற்றுவோம்" என்று மிகுந்த நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

குஜராத் டைட்டன்ஸ் அணி அறிமுகமான ஆண்டிலேயே கோப்பையை வென்று சாதனை படைத்தது. தற்போது கில் தலைமையிலான அந்த அணி, மீண்டும் பழையபடி வெற்றிகளைப் பெற்று, கோப்பையை வெல்லும் முனைப்பில் உள்ளது. டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்காத விரக்தியைத் தாண்டி, ஐபிஎல் களத்தில் கில் மீண்டும் ஒருமுறை தனது பேட்டிங் திறமையை நிரூபிப்பார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
