லண்டன்: இங்கிலாந்தில் நடைபெற்ற 'ரெட் ஃபார் ரூத்' என்ற தொண்டு நிறுவனத்திற்கான ஏலத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் இளம் கேப்டன் சுப்மன் கில் அணிந்திருந்த டெஸ்ட் ஜெர்சி, இந்திய மதிப்பில் சுமார் ₹5.41 லட்சத்திற்கு (£4,600) ஏலம் போயுள்ளது. இந்த ஏலத்தில் வைக்கப்பட்ட கிரிக்கெட் வீரர்கள் தொடர்பான பொருட்களில், கில்லின் ஜெர்சிக்குத்தான் அதிகபட்ச விலை கிடைத்துள்ளது.
கில்லின் ஜெர்சிக்கு ஏன் இவ்வளவு மவுசு?
சமீபத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆண்டர்சன்-டெண்டுல்கர் டிராபியின் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியின்போது, சுப்மன் கில் இந்த ஜெர்சியை அணிந்து விளையாடினார். இந்தத் தொடர் முழுவதும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கில், 754 ரன்கள் குவித்து தொடரின் அதிகபட்ச ரன் அடித்த வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.

இதன் காரணமாக, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அவரது ஜெர்சிக்கு பெரும் வரவேற்பு இருந்தது. மேலும், ஏலத்திற்கான இணையதளத்தில், "கில்லின் இந்த ஜெர்சி, களத்தில் விளையாடியதற்கான அடையாளங்களுடன், துவைக்கப்படாமல் உள்ளது. இது ஒரு அரிய சேகரிப்புப் பொருளாகும்" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கில்லுக்கு அடுத்தபடியாக, இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா ஆகியோரின் ஜெர்சிகள் தலா ₹4.94 லட்சத்திற்கு (£4,200) ஏலம் போயின. வீரர் கே.எல். ராகுலின் ஜெர்சி சுமார் ₹4.71 லட்சத்திற்கு (£4,000) விற்பனையானது. இங்கிலாந்து வீரர்களில், ஜோ ரூட்டின் ஜெர்சி அதிகபட்சமாக ₹4.47 லட்சத்திற்கு (£3,800) ஏலம் போனது.
'ரெட் ஃபார் ரூத்' என்பது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆண்ட்ரூ ஸ்ட்ராஸ் அவர்களால் தொடங்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். அவரது மனைவி ரூத் ஸ்ட்ராஸ், புற்றுநோயால் காலமானார். அவரது நினைவாக இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. குணப்படுத்த முடியாத நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோரின் குடும்பங்களுக்கு உதவுவதே இந்த அமைப்பின் முக்கிய நோக்கமாகும்.
ஒவ்வொரு ஆண்டும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும் ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு நாள், இந்த அறக்கட்டளைக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. அன்று வீரர்கள், வர்ணனையாளர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் சிவப்பு நிற உடை அணிந்து ஆதரவு தெரிவிப்பார்கள். இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதி, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுகிறது.