மும்பை : ஐபில் 2023 ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் போட்டியிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதனால் இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லும் என எதிர்பார்த்த சிஎஸ்கே ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்தனர். மேலும் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சும் கவலை அளிக்கும் விசயமாக உள்ளது.
எனினும் இதில் ஒரு நல்ல விசயம் என்னவென்றால் சிஎஸ்கே அணியில் வெளிநாட்டு வீரர்கள் சிலர் இன்னும் ஐபிஎல் தொடருக்கு வந்து சேரவில்லை. அவர்கள் வந்த பிறகு, சிஎஸ்கே முழு பலத்தை எட்டி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இம்முறை சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 7 போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் சிஎஸ்கே அணி குறைந்தது, 5 போட்டிகளில் வென்றால் கூட, அது பெரிய பிளசாக பார்க்கப்படும். இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் நம்பிக்கை இழக்க வேண்டாம். இன்னும் உங்களை உற்சாகப்படுத்த கூடிய ஒரு விசயமும் இருக்கிறது. இந்த சீசன் தொடக்கமே சிஎஸ்கே அணி சாம்பியன் பட்டம் வென்ற 2021ஆம் ஆண்டு ஸ்கிரிப்ட் போல் இருப்பது தெரியவந்துள்ளது.
2020ஆம் ஆண்டு சென்னை அணி படுதோல்வியை தழுவியதை அடுத்து, 2021ஆம் ஆண்டு சாம்பியன் பட்டம் வென்று சிஎஸ்கே அணி கெத்து காட்டியது. எனினும் 2021ஆம் ஆண்டு சீசனின் முதல் போட்டியில் சிஎஸ்கே அணி டெல்லி அணியிடம் தோல்வியை தழுவியது. தற்போது 2022ஆம் ஆண்டும் மோசமாக விளையாடிய சிஎஸ்கே, 2023ஆம் ஆண்டும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி இம்முறை சாம்பியன் பட்டம் வெல்லுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை அணி தற்போது தனது 2வது லீக் ஆட்டத்தில் லக்னோவை எதிர்கொள்ள உள்ளது. லக்னோ அணி பேட்டிங், பந்துவீச்சில் பலமாக உள்ளதை நேற்று ரசிகர்களிடம் வெளிப்படுத்தினார்கள். இதனால், சிஎஸ்கே லக்னோ படையை சமாளிக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021ஆம் ஆண்டு ஸ்கிரிப்ட் படி பார்த்தால் சிஎஸ்கே அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.