மும்பை : இந்திய கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோலி இருவரின் குடும்பத்திலும் ஏராளமான ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட்டின் முகமாக இருந்தவர் சச்சின் டெண்டுல்கர். அதே இடத்தில் இப்போது விராட் கோலி இருந்து வருகிறார். அமெரிக்காவில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு விராட் கோலியின் புகைப்படம் கொண்டே விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக சொல்லி வைத்தது போல் முறியடித்து வருகிறார் விராட் கோலி.

இன்னும் சொல்லப் போனால் சச்சினின் இடத்தை விராட் கோலி மிகச்சிறப்பாக நிரப்பியுள்ளார். இந்த நிலையில் விராட் கோலிக்கும் சச்சின் டெண்டுல்கருக்கும் இடையில் கிரிக்கெட் மட்டுமல்லாமல் குடும்ப அளவிலும் பல்வேறு ஒற்றுமைகள் இருந்து வருகின்றன. பிப்.15ஆம் தேதி விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
3 ஆண்டுகளுக்கு முன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா தம்பதியினருக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், அந்த குழந்தைக்கு வாமிகா என்று பெயர் சூட்டப்பட்டது. தற்போது பிறந்துள்ள ஆண் குழந்தைக்கு ஆகாய் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் சச்சினை போல் விராட் கோலிக்கும் முதலில் பெண் குழந்தையும், பின்னர் ஆண் குழந்தையும் பிறந்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் சச்சின் டெண்டுல்கருக்கு மகளுக்கு அவர் பெயரின் முதல் எழுத்தான "S"ல் தொடங்கும் சாரா என்று பெயர் வைத்தார். அதேபோல் விராட் கோலி மகளுக்கு அவர் பெயரின் முதல் எழுத்தான ”V”ல் தொடங்கும் வாமிகா என்று பெயர் வைத்துள்ளார். இதேபோல் சச்சின் - அஞ்சலிக்கு பிறந்த ஆண் குழந்தைக்கு, அஞ்சலியின் பெயரில் தொடங்கும் "A"ல் அர்ஜுன் என்று பெயர் வைத்தார்.
அதேபோல் இப்போது விராட் கோலி மனைவி அனுஷ்கா சர்மாவின் பெயரில் உள்ள "A"ல் தொடங்கும் ஆகாய் என்று பெயர் வைத்துள்ளார். களத்தில் மட்டுமல்லாமல் களத்திற்கு வெளியேயும் இவர்களுக்கு ஒற்றுமைகள் இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல் சச்சின் டெண்டுல்கர் எப்படி தனது தந்தை இறந்து இறுதி சடங்கை முடித்து அணிக்கு திரும்பினாரோ, அதேபோல் விராட் கோலி தந்தையின் இறப்புக்கு பின் உடனடியாக களத்திற்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.