மும்பை: சிம்மன்ஸ் அதிரடியாக 82 ரன்கள் விளாச மேற்கு இந்திய தீவுகள் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
இருபது ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த போட்டியில் பல முறை அவுட் ஆகாமல் அதிர்ஷ்டத்தால் தப்பினார் சிம்மன்ஸ்.

நேற்று அஷ்வின் வீசிய தனது முதல் ஓவரின் 5வது பந்தில் 18 ரன்கள் எடுத்திருந்த சிம்மன்ஸ் அடித்த பந்தை பாய்ந்து பிடித்தார் பும்ரா. ஆனால் ரீப்ளேயில் அஷ்வின் வீசியது நோ பால் என தெரிய வர சிம்மன்ஸ் தப்பினார்.
இதையடுத்து அடித்து ஆடிய சிம்மன்ஸ் 50 ரன்களை எடுத்த போது பாண்ட்யா பந்தில் அஷ்வினிடம் சிக்கினார். அப்போது இந்திய வீரர்கள் ஆரவாரத்துடன் மகிழ்ச்சியில் இருந்தனர். ஆனால் அதுவும் 'நோ பால்' ஆனதால் இதுவும் அவுட் இல்லை. இப்படி ஒவ்வொரு கட்டத்திலும் சிம்மன்ஸ் தப்பி வந்தார். இப்படி இந்திய பவுலர்கள் நோ பால் வீசியதை கண்டு வான்கடே ஸ்டேடியத்தில் இருந்த ரசிகர்கள் மட்டுமல்ல டிவியில் பார்த்த ரசிகர்களும் கடுப்பாகினர்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் 69 ரன்கள் எடுத்தபோது பந்தை சிக்ஸருக்கு விரட்ட தூக்கியடித்தார். அதை ஜடேஜா பவுண்டரி எல்லையில் கால் வைத்து கேட்ச் செய்ய இதுவும் அவுட் இல்லாமல் போனது.
இப்படி மூன்று முறை அவர் அவுட்டாகமல் தப்பிய சிம்மன்ஸ் கடைசி வரை போராடி மேற்கு இந்திய தீவுகள் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.
இறுதி வரை அவுட் ஆகாமல் இருந்த சிம்மன்ஸ் 51 பந்துகளில் 82 ரன்கள் குவித்தார். இதில் 7 சிக்ஸர், 5 பவுண்டரியும் அடங்கும். இதையடுத்து இந்திய அணியின் இறுதிப்போட்டி கனவு தளர்ந்துபோனது.உலக கோப்பை போட்டியில் இருந்தும் வெளியேறியது.