
கடும் நஷ்டம்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மூன்று மாதங்களாக சர்வதேச கிரிக்கெட் தொடர் எதுவும் நடைபெறவில்லை. அதனால், அத்தனை கிரிக்கெட் அணிகளும் கடும் நஷ்டம் அடைந்தன. எப்போது கிரிக்கெட் தொடரை மீண்டும் துவக்கலாம் என்பதில் அனைத்து அணிகளும் ஆர்வம் காட்டின.

3800 கோடி அளவுக்கு நஷ்டம்
அதில் இங்கிலாந்து அணி முந்திக் கொண்டது. கிரிக்கெட் தொடர்களை இந்த ஆண்டுக்குள் நடத்தாமல் போனால் இங்கிலாந்து அணிக்கு சுமார் 3800 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. அதை தவிர்க்க வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான டெஸ்ட் தொடரை நடத்த உள்ளது இங்கிலாந்து.

எந்த லாபமும் அளிக்கப் போவதில்லை
ஏற்கனவே, நஷ்டத்தில் இருக்கும் இங்கிலாந்து அணி, நஷ்டத்தை ஈடு கட்டவே இந்த தொடரை நடத்துகிறது. அதனால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு வருமானத்தில் எந்த லாபமும் அளிக்கப் போவதில்லை என ஒரு தகவல் கூறப்படுகிறது.

என்ன செய்ய வேண்டும்?
இருதரப்பு கிரிக்கெட் போட்டிகளில் தொடரை நடத்தும் நாடு, தங்களுக்கு கிடைக்கும் வருமானத்தில் ஒரு பங்கை, தங்களுடன் கிரிக்கெட் தொடரில் ஆட ஒப்புக் கொண்ட அணிக்கு வழங்க வேண்டும். ஆனால், இந்த தொடரில் இங்கிலாந்து அப்படி எந்த வருமானத்தையும் பகிரப் போவதில்லை.

உயிரை பணயம் வைத்து..
வெஸ்ட் இண்டீஸ் அணி எந்த லாபமும் இல்லாமலேயே இந்த டெஸ்ட் தொடரில் பங்கேற்க ஒப்புக் கொண்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில், குறிப்பாக ஐரோப்பாவில் பாதிப்பு அதிகம் இருக்கும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தங்கள் உயிரை பணயம் வைத்தே இந்த தொடருக்கு ஒப்புக் கொண்டுள்ளார்கள்.

விமர்சனம்
அப்படி இருக்கும் போது அதில் லாபமும் கிடைக்காது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வேகப் பந்துவீச்சாளர் சர் ஆன்டி ராபர்ட்ஸ். அவர் இது பெரிய தவறு எனவும் கூறி உள்ளார்.

இதுதான் பிரச்சனை
சர் ஆன்டி ராபர்ட்ஸ் கூறுகையில், "அவர்கள் இங்கிலாந்து செல்ல பேசியதில் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. எனக்கு என்ன பிரச்சனை என்றால், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இந்த தொடரில் நிதி அளவில் எந்த லாபமும் இல்லை என கூறப்படுவது தான்." என்றார்.

மற்ற நாடுகள் என்ன செய்யும்?
"இது தவறு என நான் நினைக்கிறேன். நாம் ஒப்புக் கொண்ட இந்த வாய்ப்பை, பல நாடுகள் ஒப்புக் கொள்ள விரும்பவில்லை. நாம் ஏன் இங்கிலாந்து அணியின் 3600 கோடிகளை காப்பாற்ற இந்த வாய்ப்பை ஒப்புக் கொண்டோம்?" என்றார் சர் ஆன்டி ராபர்ட்ஸ்.

கினிப் பன்றிகள் போல..
"யாருமே இங்கிலாந்து செல்லவில்லை என்றால் அவர்கள் அந்த பணத்தை திரும்ப அளிக்க வேண்டும். அவர்கள் அதை திருப்பி அளிக்க விரும்பவில்லை. அப்புறம் நாம் மட்டும் ஏன் கினிப் பன்றிகள் போல ஒன்றுமே இல்லாதவற்றுக்காக நம்மை தியாகம் செய்ய வேண்டும்?" என சரமாரியாக விமர்சனம் செய்தார்.


Click it and Unblock the Notifications











