மெல்போர்ன்: கோபக்கார விராத் கோஹ்லி வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பதிலடி கொடுக்கத் தவறுவதில்லை. அந்த வகையில் இன்றும் ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் பால்க்னருக்கு அவர் பதிலடி கொடுத்தார். தன்னைச் சீண்டிய பால்க்னருக்கு தனது சதத்தால் பதில் அளித்தார் பால்க்னர்.
இன்றைய போட்டியின்போது விராத் கோஹ்லிக்கும், பால்க்னருக்கும் இடையே முட்டிக் கொண்டது. விராத் கோஹ்லி அப்போது 72 ரன்களில் ஆடிக் கொண்டிருந்தார். பால்க்னர் பவுலிங் செய்தார். அது 35வது ஓவராகும்.

அப்போது முதல் நான்கு பந்துகளைச் சந்தித்த கோஹ்லி அதில் ரன் எடுக்கவில்லை. 5வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். அப்போது கோஹ்லியைப் பார்த்து பால்க்னர் ஏதோ சொன்னார். அதற்கு கோஹ்லியும் கோபமாக பதிலளித்தார். இருவரும் கோபத்துடன் பேசிக் கொண்டதை நடுவர் ரிச்சர்ட் கெட்டில்போரா அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார்.
கோஹ்லி பால்க்னரைப் பார்த்து, எனது வாழ்க்கையில் உனது பந்துகளை போதும் என்று கூறும் அளவுக்கு அடித்து நொறுக்கி விட்டேன். நீ உன்னோட எனர்ஜியை வீணடித்துக் கொண்டிருக்கிறாய் என்று கூறியது ஸ்டம்பில் உள்ள மைக்ரோபோனில் பதிவாகியிருந்தது.
அடுத்த ஓவரிலும் கூட இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால் அவர்கள் பேசியது இந்த முறை தெளிவாகக் கேட்கவில்லை.
இவர்களின் சண்டையில் செமத்தியாக சிக்கிக் கொண்டவர் போலன்ட்தான். 35வது ஓவரை பால்க்னர் முடித்து விட்டு 36வது ஓவரில் போலன்ட் பந்து வீச வந்தார். அந்த ஓவரில் பெரிய சிக்ஸரை விளாசினார் கோஹ்லி.
இந்தப் போட்டியில் கோஹ்லி சதம் போட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இது அவருக்கு 24வது ஒரு நாள் சதமாகும்.