மும்பை: இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவின் திருமணம் பாதியிலேயே நின்றதால் குடும்பமே சோகத்தில் ஆழ்ந்துள்ள நிலையில், மாப்பிள்ளை பலாஷ் முச்சல்லின் தாயார் அமிதா முச்சல் முதல்முறையாக மனம் திறந்து பேசியுள்ளார். "ஸ்மிருதியும், பலாஷும் மிகுந்த வேதனையில் உள்ளனர்" என்று அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார். இதற்கிடையில், மாப்பிள்ளை பலாஷ் முச்சல் குறித்து பரவும் ஒரு வதந்தி எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல அமைந்துள்ளது.
இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவுக்கும், இசையமைப்பாளர் பலாஷ் முச்சலுக்கும் சாங்லியில் திருமணம் நடைபெறவிருந்தது. ஆனால், திருமணத்திற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு ஸ்மிருதியின் தந்தை ஸ்ரீனிவாஸ் மந்தனாவுக்கு மாரடைப்பு அறிகுறிகள் தென்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த அதிர்ச்சியில் மாப்பிள்ளை பலாஷ் முச்சலும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதனால் திருமணம் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
இந்தச் சோகமான சூழல் குறித்து பேட்டியளித்த பலாஷின் தாயார் அமிதா முச்சல், "ஸ்மிருதி மற்றும் பலாஷ் இருவருமே மிகுந்த மன வேதனையில் உள்ளனர். என் மகன் பலாஷ், தன் மணப்பெண்ணுடன் வீட்டிற்கு வருவான் என்று நான் கனவு கண்டேன். மருமகள் ஸ்மிருதியை வரவேற்க நான் சிறப்பு ஏற்பாடுகளைக்கூடச் செய்திருந்தேன்.
எதிர்பாராத விதமாக இப்படி நடந்துவிட்டது. ஆனாலும், எல்லாம் விரைவில் சரியாகும். மிக விரைவில் திருமணம் கோலாகலமாக நடக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது" என்று உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
தற்போது ஸ்மிருதியின் தந்தை மற்றும் பலாஷ் முச்சல் ஆகிய இருவரும் உடல்நலம் தேறி மருத்துவமனையிலிருந்து வந்துவிட்டனர். பலாஷ் முச்சல் மேல் சிகிச்சைக்காகவும், ஓய்வுக்காகவும் மும்பை திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஒருபுறம் குடும்பத்தினர் சோகத்தில் இருக்க, மறுபுறம் இணையத்தில் பலாஷ் முச்சல் குறித்து ஒரு சர்ச்சை வெடித்துள்ளது. பலாஷ் முச்சல், இன்ஸ்டாகிராமில் வேறு ஒரு பெண்ணுடன் நெருக்கமாகச் சாட்டிங் செய்தது போன்ற சில ஸ்கிரீன் ஷாட்கள் சமூக வலைதளங்களில் கசிந்து பரவி வருகின்றன.
திருமணம் தடைபட்டதற்கும், ஸ்மிருதி மந்தனா திருமணப் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து நீக்கியதற்கும் இந்த சர்ச்சை சாட்டிங் விவகாரம் தான் காரணமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இருப்பினும், இந்த வதந்தி குறித்தோ அல்லது வைரலாகும் சாட் குறித்தோ பலாஷ் முச்சல் தரப்பிலிருந்து இதுவரை எந்தவிதமான மறுப்போ அல்லது விளக்கமோ அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இக்கட்டான சூழலில், ஸ்மிருதி மந்தனாவுக்கு ஆறுதலாக இருக்க, அவரது நெருங்கிய தோழியும் சக கிரிக்கெட் வீராங்கனையுமான ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மகளிர் பிக் பாஷ் லீக் (WBBL) தொடரிலிருந்து பாதியிலேயே விலகி இந்தியா திரும்பியுள்ளார்.
ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளப் பக்கங்களிலிருந்து திருமண நிச்சயதார்த்தப் புகைப்படங்களை நீக்கியது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இருவீட்டாரும் தற்போதைக்கு உடல்நலனில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.