ஜனவரி 17 -பிப்.9 வரை
தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அன்டர்-19 உலக கோப்பை தொடரில் இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட அணிகள் பங்கேற்று ஆடி வருகின்றன. கடந்த 17ம் தேதி துவங்கி பிப்ரவரி 9ம் தேதிவரை நடைபெறவுள்ள இந்த தொடரில் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், காலிறுதியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்று தற்போது நியூசிலாந்து அணியும் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
காலிறுதிப் போட்டிகள்
இந்த தொடரில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் ஏற்கனவே அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அடுத்ததாக காலிறுதிப் போட்டிகளில் வங்கதேச அணியுடன் தென்னாப்பிரிக்காவும், பாகிஸ்தானுடன் ஆப்கானிஸ்தானும் மோதவுள்ளன. இந்த போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள், அரையிறுதிக்கு முன்னேறும்.
வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி
மேற்கிந்திய தீவுகள் மற்றும் நியூசிலாந்திற்கு இடையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில், முதலில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி, பேட்டிங்கை தேர்வு செய்தது. அணியின் வீரர் கிர்க் மெக்கென்சி 104 பந்துகளில் 99 ரன்களை எடுத்திருந்த போது 43வது ஓவரில் காயமடைந்து பெவிலியனுக்கு திரும்பினார். பின்பு 48வது ஓவரில் மீண்டும் வந்து ஆடி கிறிஸ்டியன் கிளார்க் பந்துவீச்சில் அவுட்டானார்.
உதவிய நியூசிலாந்து வீரர்கள்
அப்போது மைதானத்திலிருந்து பெவிலியனுக்கு திரும்ப அவர் மிகுந்த சிரமப்பட்டார். நடக்க முடியாத அவரை, நியூசிலாந்தின் இரண்டு இளம் வீரர்கள் கைத்தாங்கலாக பிடித்துக் கொண்டு அவர் மைதானத்திலிருந்து செல்ல உதவினர். இளம் எதிரணி வீரர்களின் இந்த செய்கை மைதானத்தில் பார்வையாளர்களை நெகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது.
|
ரோகித் சர்மா பாராட்டு
நியூசிலாந்து வீரர்களின் இந்த உதவியை கிரிக்கெட் உலக கோப்பை நிர்வாகம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. இதையடுத்து வீரர்களின் செய்கைக்கு பாராட்டு தெரிவித்த இந்திய துவக்க வீரர் ரோகித் சர்மா, இதை பார்ப்பதற்கு மிகவும் சந்தோஷமாக இருந்ததாகவும், கிரிக்கெட்டின் ஆன்மா வெளிப்பட்டுள்ளதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். உடன் வீரர்கள் உதவி செய்த வீடியோவையும் பகிர்ந்தார்.
நியூசிலாந்து அணி வெற்றி
238க்கு மேற்கிந்திய தீவுகள் அணி தன்னுடைய ஆட்டத்தை முடித்துக் கொண்ட நிலையில், அடுத்ததாக களமிறங்கிய நியூசிலாந்து அணி 67 ரன்களில் அடுத்தடுத்து 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆயினும் சுதாரித்துக் கொண்ட நியூசிலாந்து, 239 ரன்கள் என்ற இலக்கை வெற்றி கொண்டு அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. அணியின் கிளார்க் 46 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார்.