மும்பை : டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதை அடுத்து பிசிசிஐ முன்னாள் தலைவர் கங்குலி வெளியிட்ட ஒரு பேட்டி தான் சர்ச்சையில் ஏற்படுத்தி இருக்கிறது. அதில் கங்குலி உண்மையை தான் சொன்னார் என்றாலும் அதற்கு பலரும் கேள்வி எழுப்பினர்.
அதாவது ரோகித் சர்மாவை தாம் தான் கேப்டனாக நியமித்தேன் என்றும் இதனால் தான் இந்தியா இன்று டி20 கோப்பை வென்று இருப்பதாகவும் கூறினார். இதனால் இனி என்னை யாரும் விமர்சிக்க மாட்டார்கள் என்று நம்புவதாக கங்குலி கூறினார். இந்த நிலையில் ரோகித் சர்மாவை நீங்கள் தான் கேப்டனாக நியமித்தீர்கள் என்றால் விராட் கோலியை வெளியே அனுப்பியதும் நீங்கள் தானே என்று அவருடைய ரசிகர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்தப் பிரச்சனை தொடங்கிய சமயத்தில் விராட் கோலியை தான் போக சொல்லவில்லை என்று கூறினீர்களே? இப்போது ரோகித் சர்மாவை நீங்கள் தான் நியமித்தீர்கள் என்று சொல்கிறீர்கள். இது மாறுபட்டு கருத்தாக தெரியவில்லையா என்று பலரும் கேள்வி எழுப்பினர். வேலியில் சென்ற ஓணானை வேட்டியில் விட்ட கதையாக கங்குலியின் இந்த பேட்டி அமைந்துவிட்டது.
இதனால் மீண்டும் கங்குலி விளக்கம் ஒன்று அளித்திருக்கிறார். அதில் நான் விராட் கோலியை கேப்டன் பதவியில் இருந்து நீக்கவில்லை. இதை நான் பலமுறை கூறிவிட்டேன். விராட் கோலி டி20 கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக இருக்க விரும்பவில்லை. இந்த முடிவை விராட் கோலி எடுத்த பிறகு, நான் அவரிடம் டி 20 யில் கேப்டனாக இருக்க முடியவில்லை என்றால் ஒட்டுமொத்தமாக ஒரு நாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்தும் நீங்கள் விலகி விடுங்கள் என்று தான் நான் சொன்னேன்.
இதன் மூலம் வெள்ளை நிற பந்து கிரிக்கெட்டுக்கு ஒரு கேப்டன் சிவப்பு நிற பந்துக்கு ஒரு கேப்டன் என்று இரண்டு கேப்டன்கள் இருப்பார்கள் என்று நான் கூறினேன். அதன் பிறகு அடுத்த வெள்ளைநிற கேப்டன் யார் என்று கேள்வி எழுந்த போது ரோகித் சர்மாவின் பெயரை நான் பரிந்துரை செய்தேன்.
இதுதான் நடந்தது, தான் யாரையும் கேப்டன் பதவியை விட்டு செல்லுங்கள் என்று கூறவில்லை என்று கங்குலி மீண்டும் விளக்கம் அளித்திருக்கிறார்.ஒருநாள் கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி டெஸ்டில் இருந்தும் கேப்டனாக விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.