கொல்கத்தா : டி20 உலக கோப்பையில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ரோகித் சர்மாவை கேப்டனாக மாற்றியதே தான் தான் என்பதை யாரும் மறந்து விட வேண்டாம் என்று முன்னாள் பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையில் இந்திய அணி தொடர்ந்து ஐசிசி போட்டிகளில் தோல்வியை தழுவி வந்தது. ஆனால் விராட் கோலி தான் இந்திய கிரிக்கெட்டின் பவர் ஹவுசாக இருந்தார். இதனால் அவரை மாற்ற எந்த ஒரு கிரிக்கெட் நிர்வாகிகளும் முன்வரவில்லை.

ஆனால் விராட் கோலியின் கேப்டன்சியை விட ரோகித் சர்மா சிறந்த முறையில் கேப்டன்ஷிப் செய்வதாக கணித்த கங்குலி தைரியமாக விராட் கோலியை பதவியை விட்டு தூக்கினார். இதனால் விராட் கோலி ரசிகர்கள் அவரை கடுமையாக சாடினர். இந்த நிலையில் கங்குலியின் அப்போதைய இந்த மாற்றம் தற்போது இந்திய அணிக்கு வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்கிறது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணி ஐசிசி தொடரை கைப்பற்றி இருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி, தாம் பிசிசிஐ தலைவராக இருந்த போது கேப்டன்சியை விராட் கோலியிடமிருந்து ரோகித் சர்மாவுக்கு வழங்கினேன். அப்போது என்னை பலரும் விமர்சித்தார்கள். தற்போது ரோகித் சர்மா தலைமையில் இந்தியா டி20 கோப்பையை வென்று விட்டது. இதனால் என்னை யாரும் தற்போது திட்டுவதில்லை.
ஆனால் நான்தான் ரோகித் சர்மாவை கேப்டனாக நியமித்தேன் என்பதை பலரும் மறந்து விட்டார்கள் என்று கங்குலி கூறியுள்ளார். இந்த சூழலில் டி20 சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மா,விராட் கோலி ஆகிய இருவரும் தற்போது ஓய்வு பெற்று விட்டார்கள். எனினும் இருவரும் சர்வதேச டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவார்கள். இதில் ரோகித் சர்மா தான் இந்திய டெஸ்ட் அணிக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்தியா ஒரு நாள் அணிக்கும் கேப்டன் ஆக இருப்பார் என தெரிகிறது.