கொல்கத்தா : இந்திய டி20 கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு இடம் இருப்பதாக இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி தெரிவித்துள்ளார்.வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி20 அணி தற்போது அறிவிக்கப்பட்டது.
இதில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி,கேஎல் ராகுல் ஆகியோருக்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியாலில் நடைபெற்ற டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்த மூன்று வீரர்களும் இருதரப்பு டி20 தொடர்களில் விளையாடுவதில்லை.

இதன் மூலம் அடுத்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்த மூன்று வீரர்களும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கங்குலி சிறந்த வீரர்களை உங்கள் அணியில் தேர்வு செய்யுங்கள். அவர் யாராக இருந்தாலும் பரவாயில்லை. என்னைக் கேட்டால் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் இன்னும் டி20 கிரிக்கெட்டில் இடம் இருக்கிறது.
அவர்களால் ஏன் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாட முடியாது என்ற காரணத்தை என்னால் பார்க்க முடியவில்லை. ஐபிஎல் தொடரில் விராட் கோலி சிறப்பான ஃபார்மில் இருந்தார். இருவருக்குமே டி 20 கிரிக்கெட்டில் இன்றும் இடம் இருக்கிறது. இதேபோன்று அணியில் இடம் கிடைக்காத இளம் வீரர்கள் தங்களுடைய மனதை இழந்து விட வேண்டாம். நீங்கள் தொடர்ந்து விளையாடுங்கள். தொடர்ந்து ரன் குவியுங்கள்.
உங்களுக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கிறதோ, அதனை எல்லாம் கெட்டியாக பிடித்துக் கொள்ளுங்கள். வெறும் 15 வீரர்களை தான் அணியில் தேர்வு செய்ய முடியும். அதில் 11 வீரர்கள் தான் விளையாடுவார்கள். இதன் காரணமாக எத்தனையோ திறமையான வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்காமல் போயிருக்கிறது.
எனினும் மனதை தளர விடாமல் நம்பிக்கையுடன் இருங்கள். உங்களுக்கான நேரம் நிச்சயமாக வரும் என்று கங்குலி கூறியுள்ளார். விராட் கோலிக்கும் கங்குலிக்கும் மோதல் நிலவி வருவதாக ரசிகர்கள் கூறும் நிலையில் கோலிக்காக கங்குலி ஆதரவாக பேசியிருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. நடப்பாண்டில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுவதால் சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரும் விதமாகத்தான் அவர்கள் டி20 போட்டிகளில் இடம் பெறவில்லை என்று கிரிக்கெட் வட்டார தகவல் தெரிவிக்கின்றன.