கொல்கத்தா: கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் மெஸ்ஸி நிகழ்ச்சி பாதியிலேயே முடிவுக்கு வந்ததற்குப் பின்னால் நடந்த பரபரப்பான சம்பவங்கள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன. மைதானத்தை விட்டு வெளியேறத் தயாரான மெஸ்ஸியிடம், முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி "ரசிகர்களுக்காகச் சிறிது நேரம் பொறுத்திருங்கள்" என்று கோரிக்கை விடுத்ததாகவும், ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக மெஸ்ஸி தரப்பு அதை ஏற்க மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்பந்து உலகின் முன்னணி வீரர் லியோனல் மெஸ்ஸி மூன்று நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இங்கு முக்கிய நகரங்களில் அவர் ரசிகர்களை சந்திக்க பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. முதல் நிகழ்ச்சி கொல்கத்தாவில் நடந்தது.

அங்கு ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து டிக்கெட் வாங்கிய ரசிகர்களுக்கு, மெஸ்ஸியைச் சரியாகப் பார்க்க முடியவில்லை. மேடையில் இருந்த அமைச்சர்கள், விஐபிக்கள் மற்றும் உதவியாளர்கள் மெஸ்ஸியைச் சுற்றி வளைத்துக்கொண்டதால், கேலரியில் இருந்த ரசிகர்களுக்கு மெஸ்ஸி தெரியவில்லை. இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் மைதானத்திற்குள் தண்ணீர் பாட்டில்களை வீசத் தொடங்கினர்.
மைதானத்தில் பாட்டில்கள் பறக்கத் தொடங்கியதும், மெஸ்ஸியின் பாதுகாப்பு குழு உஷாரானது. உடனடியாக மெஸ்ஸி மற்றும் அவருடன் வந்த முன்னணி கால்பந்து வீரர்களான லூயிஸ் சுவாரஸ் மற்றும் ரோட்ரிகோ டி பால் ஆகியோரை ஏற்றிக்கொண்டு செல்ல ஆடி (Audi) கார் தயாரானது.
அந்தச் சமயத்தில், சவுரவ் கங்குலி மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சதத்ரு தத்தா ஆகியோர் மெஸ்ஸியிடம் சென்று பேசினர். "ரசிகர்கள் உங்களைப் பார்க்க ஆவலாக உள்ளனர், அதனால் இன்னும் சிறிது நேரம் மைதானத்தில் இருங்கள்" என்று கங்குலி கேட்டுக்கொண்டார். ஆனால், பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதற்கான அறிகுறிகள் தென்பட்டதால், மெஸ்ஸியின் குழு எந்த ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை. சட்டம் ஒழுங்கு பிரச்சனையைக் கருத்தில் கொண்டு, கங்குலியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டு உடனடியாக மெஸ்ஸியை அழைத்துக்கொண்டு மைதானத்தை விட்டு வெளியேறினர்.
இதற்கிடையில், ஹைதராபாத் தப்பிச் செல்ல முயன்ற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சதத்ரு தத்தாவை போலீஸார் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்துக் கைது செய்துள்ளனர். டிக்கெட் கட்டணம் திருப்பிக் கொடுக்கப்படும் என்று அவர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தாலும், அந்தப் பதிவு பின்னர் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வெறும் 20 நிமிடங்கள் மட்டுமே மெஸ்ஸி மைதானத்தில் இருந்தார். போலீஸ் பாதுகாப்பு இருந்தும் எப்படித் தண்ணீர் பாட்டில்கள் மைதானத்திற்குள் வந்தன? டிக்கெட்டுகள் ஏன் 15 மடங்கு அதிக விலைக்கு விற்கப்பட்டன? போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.