கங்குலி பிறந்தநாளில் இரட்டை மகிழ்ச்சி.. தேடி வந்த பெரும் கௌரவம்.. 'ஐசிசி ஹால் ஆஃப் பேம்' பட்டம்
கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் மதிப்புமிக்க 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் அதிகாரப்பூர்வமாக சேர்க்கப்பட்டார். இன்று (ஜூலை 8) அவர் தனது 54-வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில் இந்த மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் இந்த உயரிய கௌரவத்தைப் பெறும் 12-வது இந்திய கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
புதன்கிழமை (ஜூலை 8) அன்று இந்த மகிழ்ச்சியான தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள சவுரவ் கங்குலி, தன்னை இந்த அமைப்பில் சேர்த்ததற்காக ஐசிசி மற்றும் அதன் தலைவர் ஜெய் ஷாவுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துள்ளார். "ஐசிசி மற்றும் தலைவர் ஜெய் ஷாவுக்கு எனது நன்றிகள். இந்த உயரிய பட்டியலில் இணைவது எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். பல சிறந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள் இடம்பெற்றுள்ள இந்த அமைப்பில் இணைந்தது பெருமையாக இருக்கிறது" என்று கங்குலி நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவரான கங்குலி, சர்வதேச கிரிக்கெட்டில் இந்தியாவுக்காக அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 5-வது இடத்திலும், அதிக போட்டிகளில் வழிநடத்திய கேப்டன்கள் பட்டியலில் 4-வது இடத்திலும் உள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் தொடக்க வீரராக 9,000 ரன்களைக் கடந்த 6 வீரர்களில் இவரும் ஒருவர்.
கடந்த 1990-களின் இறுதியிலும் 2000-களின் தொடக்கத்திலும் ஒருநாள் போட்டிகளில் மிகச்சிறந்த பேட்ஸ்மேனாகத் திகழ்ந்த கங்குலி, 1999-ல் 41 போட்டிகளில் விளையாடி 1767 ரன்கள் குவித்தார். இது சச்சின் டெண்டுல்கரின் 1894 ரன்களுக்குப் பிறகு ஒரு காலண்டர் ஆண்டில் ஒரு வீரர் எடுத்த இரண்டாவது அதிகபட்ச ரன்களாகும். அதேபோல் 2000-ல் அவர் விளாசிய 7 சதங்களும், சச்சினின் 9 சதங்களுக்குப் பிறகு இரண்டாவது அதிகபட்ச சாதனையாக இன்றும் நீடிக்கிறது.
கங்குலியின் சிறந்த செயல்பாடு
கடந்த 1992 முதல் 2008 வரை 16 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கெட்டில் முத்திரை பதித்த கங்குலி, இந்தியாவுக்காக 113 டெஸ்ட் மற்றும் 311 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 7,212 ரன்களையும் 32 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அதேபோல், ஒருநாள் போட்டிகளில் 11,363 ரன்களைக் குவித்து 100 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியுள்ளார்.
கடந்த 2000 முதல் 2005 வரை இந்திய அணியின் கேப்டனாகச் செயல்பட்ட கங்குலி, இந்திய கிரிக்கெட்டின் முகத்தையே மாற்றியமைத்தவராக அறியப்படுகிறார். இவரது தலைமையில் 2003-ல் நடைபெற்ற ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்திய அணி தகுதி பெற்று சாதனை படைத்தது.
இதன் மூலம் சுனில் கவாஸ்கர், கபில் தேவ், பிஷன் சிங் பேடி, அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர், வினூ மன்கட், டயானா எடுல்ஜி, விரேந்தர் சேவாக், நீது டேவிட் மற்றும் எம்.எஸ். தோனி ஆகியோருக்குப் பிறகு ஐசிசி-யின் 'ஹால் ஆஃப் பேம்' பட்டியலில் இணையும் 12-வது இந்திய வீரராக கங்குலி மாறியுள்ளார்.
இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்ட கங்குலி, பின்னர் இந்திய கிரிக்கெட்டை நிர்வகிக்கும் பிசிசிஐ அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார். தற்போது சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படம் உருவாகி வரும் நிலையில், அவரது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் கங்குலியின் ரசிகர்கள் இரட்டை மகிழ்ச்சியில் திளைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications
