சென்னை: சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கவுள்ள கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டிக்கு பின் சென்னை அணி வீரர்களுக்கு கேப்டன் எம்எஸ் தோனி விருந்து கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தோனி நடப்பு ஐபிஎல் சீசனோடு ஓய்வை அறிவிக்கப் போகிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரின் 61வது லீக் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து கொல்கத்தா அணி விளையாட உள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தப் போட்டி நடக்கவுள்ளதால், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் அபாரமான பேட்டிங்கை பார்த்து ரசிகர்கள் உற்சாகமடைந்த நிலையில், இன்றையப் போட்டியிலும் கேப்டன் தோனி அசத்துவாரா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
இந்த நிலையில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியின் போது சென்னை அணி வீரர்களுக்கு கேப்டன் எம்எஸ் தோனி தரப்பில் விருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே நடப்பு ஐபிஎல் தொடரோடு சென்னை அணியின் கேப்டன் தோனி ஓய்வு பெற உள்ளதாக கூறப்பட்டு வரும் நிலையில், தோனி சென்னை அணி வீரர்களுக்கு பார்ட்டி கொடுப்பதாக வெளியான தகவல் ரசிகர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சில நாட்களுக்கு முன் டாஸின் போது டேனி மாரிஸன் தோனியிடம், கடைசி ஐபிஎல் சீசனை எவ்வாறு கொண்டாடி வருகிறீர்கள்? என்று எழுப்பிய கேள்விக்கு, கடைசி ஐபிஎல் சீசன் என்று நீங்கள் தான் சொல்லி வருகிறீர்கள். நான் இதுவரை கடைசி சீசன் என்று சொல்லவில்லை என்று கூறி ஆச்சரியம் அளித்தார். இதனால் அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வந்தனர்.
சேப்பாக்கத்தில் கடைசி லீக் போட்டி.. பிளே ஆஃப் சுற்றில் கால் பதிக்குமா சிஎஸ்கே? கேகேஆர் உடன் மோதல்!
ஆனால் கடந்த காலங்களில் தோனி தனது ஓய்வு அறிவிப்பை எந்தவித பரபரப்பும் இல்லாமலேயே வெளியிட்டு வந்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் போது மிகவும் சாதாரணமாக கடிதம் மூலமாகவும், ஒருநாள் போட்டிகளில் இருந்து இன்ஸ்டாகிராம் வீடியோ மூலமாகவும் ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதுபோல் சென்னையில் ஆடவுள்ள கடைசி லீக் போட்டியுடன் ஓய்வு அறிவிப்பை வெளியிட வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது.