
அதிரடி பவர்பிளே
இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். பவர் பிளேவில் இந்திய அணி 51 ரன்கள் அடித்தது.ருத்துராஜ் அடித்த 23 ரன்களில் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் பின்னர் களமிறங்கிய ஸ்ரேயாஸ் ஐயரும், தொடக்கம் முதலே தனது அதிரடியை காட்டினார். இஷான் கிஷன் அதிரடியை காட்ட 37 பந்தில் இஷான் கிஷன் அரைசதம் விளாசினார். இதன் மூலம் 9.4வது ஓவரில் இந்திய அணி 100 ரன்களை தொட்டது.

இமாலய இலக்கு
தொடர்ந்து சிக்சர்களை விளாசிய இஷான் கிஷன் 48 பந்துகளில் 76 ரன்கள் அடித்தார். இதில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர் அடங்கும். ஸ்ரேயாஸ் ஐயரும் 27 பந்துகளில் 36 ரன்கள் விளாசினார். இதன் பின்னர், ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் ஹர்திக் பாண்டியா மற்றும் கேப்டன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தனர். ரிஷப் பண்ட் 2 சிக்சர், 2 பவுண்டரிகளை அடிக்க 29 ரன்களில் வெளியேறினார். 3 சிக்சர், 2 பவுண்டரி என ஹர்திக் பாண்டியா 12 பந்துகளில் 31 ரன்கள் விளாசினார். இதன் மூலம் இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 211 ரன்களை எடுத்தது.

தடுமாறிய தென்னாப்பிரிக்கா
212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை தென்னாப்பிரிக்கா அணி களமிறங்கியது.தொடக்க வீரர்கள் பெவுமா 10 ரன்களிலும், குயின்டன் டி காக் 22 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். சிஎஸ்கே வீரர் பிரிட்டோரியஸ் 13 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க , தென்னாப்பிரிக்கா அணி 81 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. ஒரு கட்டத்தில் இந்தியாவின் வெற்றி உறுதி என எதிர்பார்க்கப்பட்டது.

அபார பார்ட்னர்ஷிப்
ஆனால், 4வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், வெண்டர் டுசன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். அக்சர் பட்டேல், சாஹல் ஆகியோர் பந்துவீச்சை மில்லர் பதம் பார்க்க, தென்னாப்பிரிக்க அணியின் ஸ்கோர் ராக்கெட் வேகத்தில் உயர்ந்தது. இதன் பின்னர் வெண்டர்டுசனும் அதிரடி பார்டியில் இணைய, இந்த ஜோடியை பிரிக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். இதன் மூலம் தென்னாப்பிரிக்க அணி 5 பந்துகள் எஞ்சிய நிலையில் 3 விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

திருப்புமுனை
வெண்டர் டுசன் 30 பந்துகளில் 29 ரன்கள் அடித்திருந்த போது ஸ்ரேயாஸ் ஐயர் கைக்கு வந்த கேட்சை தவறவிட்டார். அதன் பிறகு வெண்டர் டுசன் கூடுதலாக 46 ரன்கள் எடுத்தார். மைதானத்தில் அளவு சிறியதாக இருந்ததால், இந்தியாவின் சுழற்பந்துவீச்சு எடுப்படவில்லை. மேலும் இந்தியாவுக்கு எதிராக அதிகபட்ச ரன்களை துரத்திய அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்கா பெற்றது.


Click it and Unblock the Notifications











