நான் ஒரு ராசியில்லா ராஜா…!! உலக கோப்பை தொடரில் புலம்பி தள்ளும் தென் ஆப்ரிக்கா..!!
Recommended Video
சவுதாம்ப்டன்: தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணிகள் இடையேயான போட்டி, மழையால் கைவிடப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப் பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த கட்டத்தை எட்டியிருக்கிறது. இந்நிலையில் திங்கட்கிழமை சவுதாம்ப்டனில் 15வது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்கா, மேற்கிந்திய தீவுகள் அணி மோதின.
தென் ஆப்ரிக்காவை பொறுத்தவரையில் இந்த போட்டியில் கட்டாய வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் இருந்தது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். தென் ஆப்ரிக்க அணியில் மார்க்ராம், டேல் ஸ்டைன்னுக்கு பதில் மாற்று வீரராக வந்த ஹென்ரிக்ஸ் சேர்க்கப்பட்டனர்.

ரசல் காயம்
மேற்கிந்திய தீவுகள் அணியில் எவின் லீவிஸ், ரசல் ஆகியோர் காயத்தால் போட்டியில் விளையாட வில்லை. இதையடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்க அணிக்கு டி காக், ஹசிம் ஆம்லா ஆகியோர் துவக்கம் அளித்தனர்.

ஆம்லா அவுட்
ஆம்லா 6 ரன்கள் மட்டுமே எடுத்து, கார்ட்டெல் பந்தில் கெயிலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதையடுத்து, 2வது விக்கெட்டுக்கு மார்க்ராம் களம் இறங்கினார். ஸ்கோர் 28 ரன்களாக இருந்த போது 5 ரன்களில் மார்க்ராம் காட்ரல் வேகத்தில் வெளியேறினார்.

மழை பெய்தது
2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில் அணியின் கேப்டன் டுபௌசிஸ் களம் புகுந்தார். அணியில் மேலும் ஒரு ரன் மட்டுமே சேர்க்கப்பட்டு, ஸ்கோர் 2 விக்கெட் இழப்புக்கு 29 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, எதிர்பாராத விதமாக மழை பெய்தது.

போட்டி நிறுத்தம்
இதையடுத்து, ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இரு அணி வீரர்களும் பெவிலியன் திரும்பினர். தொடர்ந்து மழை விட்டு, விட்டு பெய்த வண்ணம் இருந்தது. அவ்வப்பொழுது நடுவர்கள், மைதானத்தின் தன்மை குறித்து ஆய்வு நடத்தினர். தொடர்ந்து அதே நிலை நீடித்ததால் போட்டி கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது.

நெருக்கடியில் தெ.ஆ
போட்டி கைவிடப்பட்டதால் கடும் நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது தென் ஆப்ரிக்க அணி. ஏற்கனவே தாம் விளையாடிய 3 போட்டிகளில் தோற்று புள்ளி பட்டியலில் பூஜ்யத்தை வாங்கி வைத்திருக்கிறது. இனி வரும் போட்டிகளில் வென்றால் தான் அடுத்த கட்டத்தை பற்றியே சிந்திக்க முடியும் என்ற நிலை இருந்தது.

அரையிறுதி வாய்ப்பு?
இப்போது, 4வது போட்டி கைவிடப்பட்டதால் தென் ஆப்ரிக்கா கடும் சிக்கலில் இருக்கிறது. பாக்கி இருக்கின்ற போட்டிகளில் வெற்றி பெற்றாலும் கூட அரையிறுதி வாய்ப்பு கிடைக்குமா என்பது தெரியவில்லை. அதன் காரணமாக தென் ஆப்ரிக்கா நிர்வாகமும், வீரர்களும் கடும் சோகத்தில் இருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications