மும்பை : பிரபல தென்னாபிரிக்க வீரர் ஜேபி டுமினி தனது மனைவியை பிரிவதாக அறிவித்துள்ளார். தென்னாப்பிரிக்க அணியின் தவிர்க்க முடியாத வீரராக இருந்தவர் ஜேபி டுமினி. 46 டெஸ்ட், 199 சர்வதேச ஒரு நாள் மற்றும் 81 டி20 போட்டிகளில் ஜேபி டுமினி விளையாடுகிறார்.
தென்னாபிரிக்க அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 9000 ரன்களுக்கு மேல் ஜேபி டுமினி அடித்திருக்கிறார். அது மட்டும் இல்லாமல் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் டெல்லி மற்றும் சன்ரைசர்ஸ் அணிக்காக மொத்தம் 83 போட்டிகளில் விளையாடி 2029 ரன்களை குவித்திருக்கிறார்.

இந்த சூழலில் 40 வயதான டுமினி தனது மனைவியை பிரிந்து விட்டதாக அறிவித்துள்ளார். இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள அவர், நானும் என்னுடைய மனைவி சூவும் பல கட்ட ஆலோசனைக்கு பிறகு பிரிவதாக முடிவு எடுத்து விட்டோம். வாழ்க்கையில் பல மறக்க முடியாத நிகழ்வுகளை நாங்கள் இருவரும் பகிர்ந்து கொண்டதை ஒரு அதிர்ஷ்டமாக நாங்கள் கருதுகிறோம்.
எங்கள் திருமணம் மூலம் இரண்டு அழகிய குழந்தைகள் எங்களுக்கு கிடைத்தது. இந்த சவாலான காலகட்டத்தில் எங்களுக்கு தனிமையை ரசிகர்கள் வழங்க நான் கேட்டுக் கொள்கின்றேன். நாங்கள் வாழ்க்கையில் பிரிந்தாலும் நல்ல நண்பர்களாக நிச்சயம் இருப்போம். எங்களுடைய இந்த பிரிவு தவிர்க்க முடியாததாக மாறிவிட்டது. இந்த கடினமான காலத்தில் எனக்கு ஆதரவும் அன்பும் வழங்கும் ரசிகர்களுக்கு நன்றி என்று டுமினி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டுமினி தனது மனைவியுடன் நடனமாடி முத்தமிட்டுக் கொண்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வந்தது. தனது 40வது பிறந்த நாளை மனைவியுடன் கொண்டாடிய நிலையில் அடுத்த ஆறு மாதத்தில் தனது மனைவியை பிரிவதாக டுமினி அறிவித்திருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.
12 ஆண்டுகளாக தனது மனைவியுடன் டுமினி வாழ்ந்து வந்த நிலையில் இந்த முடிவை அறிவித்திருக்கிறார். ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா தனது மனைவியை பிரிந்த நிலையில் தற்போது அந்த அணிக்காக விளையாடிய டுமினியும் விவாகரத்து பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.