கொல்கத்தா: மேற்கு இந்திய தீவுகள் அணியின் பிராத் வெயிட் கடைசி ஓவரில் அதிரடியாக 4 சிக்ஸர்களை விளாசி அந்த அணிக்கு வெற்றியை பெற்றுத் தந்தார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டத்தை வெல்லும் இறுதி போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இங்கிலாந்து மற்றும் மேற்கு இந்திய தீவுகள் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாசில் வென்ற மேற்கு இந்திய தீவுகள் கேப்டன் சமி பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. ஜே ரூட் மட்டும் அதிகபட்சமாக 54 ரன்கள் விளாசினார்.
பின்னர் களம் இறங்கிய மேற்கு இந்திய தீவுகள் அணியின் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர். வெற்றி வாய்ப்பு கைவிட்டு போக இருந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத போது சாமுவேல்சுடன் ஜோடி சேர்ந்த பிராத் வெயிட் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
கடைசி ஓவரில் மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு 19 ரன்கள் தேவைபட்டது. ஸ்டோக்ஸ் வீசிய இந்த ஓவரில் முதல் நான்கு பந்திலும் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசினார் பிராத்வெயிட். இதைத்தொடர்ந்து மேற்கு இந்திய தீவுகள் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
கடைசி வரை அவுட் ஆகாமல் இருந்த பிராத் வெயில் 10 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார். இந்த வெற்றியின் மூலம் 2-வது முறையாக டி20 உலக கோப்பையை மேற்கு இந்திய தீவுகள் அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.