துபாய்: போதைப் பொருள் வைத்திருந்ததாக சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகம்மது ஆசிப் நிரபராதி என அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து விரைவில் அவர் நாடு திரும்புவார் என ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் அசன் உல்லா கான் கூறியுள்ளார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கலந்துகொண்டுவிட்டு மும்பையிலிருந்து துபாய் வழியாக பாகிஸ்தான் கிளம்பிய ஆசிப், போதைப் பொருள் வைத்திருந்ததாக கூறி, துபாய் போலீஸாரால் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். அவர் தனது பேன்ட் பாக்கெட்டில், 0.24 கிராம் தடை செய்யப்பட்ட போதைப் பொருளை வைத்திருந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார் ஆசிப். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், ஆசிப் நிரபராதி என தெரிய வந்துள்ளதாகவும், எனவே அவர் ஓரிரு நாட்களில் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்புவார் எனவும் எமிரேட்ஸுக்கான பாகிஸ்தான் தூதர் உல்லா கான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆசிப் மீது எந்தத் தவறும் இல்லை. இரு தரப்புக்கும் இடையே, சரியான புரிந்துணர்வு இல்லாததால்தான் இந்தக் குழப்பம் ஏற்பட்டு விட்டது. ஆசிப் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுக்களும் திரும்பப் பெறப்பட்டுள்ளன. எனவே அவர் விரைவில் நாடு திரும்புவார் என்று தெரிவித்துள்ளார்.