ஜோஹன்னஸ்பர்க்: ஐபில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தவறியது. அரை இறுதிப் போட்டியில் பெங்களூர் அணியிடம் அது பரிதாபமாகத் தோல்வியுற்று வெளியேறியுள்ளது.
நேற்று 2வது அரை இறுதிப் போட்டி ஜோஹன்னஸ்பர்கில் நடந்தது. சென்னையும், பெங்களூரும் இதில் மோதின.
படு விறுவிறுப்பாக எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் சென்னை அணி பரிதாபமாகத் தோல்வியுற்றது.
டாஸ் வென்ற பெங்களூர் கேப்டன் கும்ப்ளே, சென்னையை பேட் செய்ய பணித்தார். இதையடுத்து பார்த்திவ் படேல், ஹெய்டன் பேட்டிங்கைத் தொடங்கினர்.
இருவரும் நிதானமாக ரன் குவிப்பை ஆரம்பித்தனர்.
அணியின் ஸ்கோர் 61 ஆக இருந்தபோது ஹெய்டன் ஆட்டமிழந்தார். அவர் எடுத்த ரன்கள் 26.
பின்னர் படேலுடன் டோணி இணைந்தார். படேல் சிறிது நேரத்திலேயே 36 ரன்கள் சேர்த்த நிலையில் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரெய்னா, டோணியுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து கட்டையைப் போட்டனர்.
மகா நிதானமாக ஆடி வந்த இருவரும், 14.1வது ஓவரில் பிரிந்தனர். ரெய்னா பவுண்டரி அடிக்க முயன்று பெளச்சரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். ரெய்னா எடுத்த ரன்கள் 20 ரன்கள் எடுத்தார்.
பின்னர் களமிறங்கிய மார்க்கல் அடித்து ஆடினார். இந்த நிலையில் டோணி ஆட்டமிழந்தார். அவரது பங்கு 28 ரன்கள்.
இப்படியாக தட்டுத் தடுமாறி ஆடி வந்த சென்னை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 146 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பின்னர் களம் இறங்கிய பெங்களூர் அணி தொடக்க விக்கெட்களை விரைவில் இழந்தாலும் கூட டிராவிட், மனீஷ் பான்டேவின் ஆட்டத்தால் நிமிர்ந்தது. இருவரும் சிறப்பாக ஆடினர்.
பாண்டே 48 ரன்களையும், டிராவிட் 44 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
விராத் கோலி 24, ரோஸ் டெய்லர் 17 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இறுதியில், 18.5 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு பெங்களூர் அணி 149 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பெங்களூர் அணி.
இன்று இறுதிப் போட்டி...
இன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸ் அணியை சந்திக்கிறது பெங்களூர் அணி.
ஹைதராபாத்தும், பெங்களூரும் கடந்த போட்டித் தொடரில் கடைசி நிலையில் தள்ளப்பட்ட அணிகள் ஆகும். ஆனால் இந்த முறை யாரும் எதிர்பாராத வகையில், இறுதிப் போட்டிக்கு இரு அணிகளும் முன்னேறியுள்ளது ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளது.
அதேசமயம், கடந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய சென்னை பரிதாபமாக அரை இறுதியில் தோற்றுள்ளது. கடந்த முறை சாம்பியன் பட்டத்தை வென்ற ராஜஸ்தான் அணியோ அரை இறுதிக்குக் கூட முன்னேறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.