For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

மே.இ.தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரை வென்ற வங்கதேசம்!

By Staff

ரோசெயூ (டொமினிகா): மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் கைப்பற்றி சாதனை படைத்துள்ளது வங்கதேசம்.

மேற்கு இந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது வங்கதேசம். இந்தத் தொடரில் வங்கதேசத்திற்கு எதிராக 2ம் நிலை வீரர்கள் அடங்கிய டப்பா அணியை களம் இறக்கியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் வாரியம். காரணம், முன்னணி வீரர்கள் சம்பளப் பிரச்சினை காரணமாக ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால்.

இதன் காரணமாக, முத்துக்காளையிடம் சிக்கிய வடிவேலு கதையாகியுள்ளது மேற்கு இந்தியத் தீவுகளின் நிலை.

முதலில் இரு டெஸ்ட் போட்டிகளிலும் வென்று டெஸ்ட் தொடரை கைப்பற்றியது வங்கதேச அணி.

இது வங்கதேச அணி, சர்வதேச டூரில் வெல்லும் முதல் டெஸ்ட் தொடராகும்.

இதையடுத்து ஒரு நாள் போட்டித் தொடரையும் தெம்பாக சந்தித்தது. முதல் ஒரு நாள் போட்டியில் அபாரமாக வெற்றி பெற்று மேற்கு இந்தியத் தீவுகள் அணியை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு நேற்று 2வது ஒரு நாள் போட்டியில் ஆடியது மேற்கு இந்தியத் தீவுகள் அணி. வின்ட்சர் பார்க் மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியிலும் வங்கதேச பந்து வீச்சாளர்கள் மிரட்டினர்.

முதலில் பந்து வீச்சில் மிரட்டிய வங்கதேசம், பின்னர் பேட்டிங்கிலும் பின்னி எடுத்து மேற்கு இந்தியத் தீவுகளை புரட்டிப் போட்டு விட்டது.

அபாரப் பந்து வீச்சு காரணமாக ரன் எடுக்க முடியாமல் திணறிய மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு ஆபத்பாந்தவனாக வந்து சேர்ந்தார் டிராவிஸ் டவ்லீன். சிறப்பாக ஆடிய டவ்லீன் 117 பந்துகளைச் சந்தித்து 100 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இவரது சிறப்பான ஆட்டம் காரணமாக மேற்கு இந்தியத் தீவுகள் அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களை எடுத்தது.

இந்த ஸ்கோரை எட்ட வங்கதேசம் சிரமப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு மாறாக அபாரமான பேட்டிங் திறனை வெளிப்படுத்தினர் வங்கதேச வீரர்கள்.

ஷாகிப் அல் ஹசன் மற்றும் முகம்மது அஷ்ரபுல் ஆகியோர் அரை சதம் அடித்து வங்கதேசத்திற்கு வெற்றி தேடித் தந்தனர்.

கேப்டன் ஷாகிப், 61 பந்துகளைச் சந்தித்து 65 ரன்களைக் குவித்தார். ஆட்ட நாயகன் விருதும் இவருக்கே கிடைத்தது. அஷ்ரபுல் 77 பந்துகளில் 64 ரன்களைக் குவித்தார்.

ஆட்டம் முடிய கடைசி 6 பந்துகள் இருந்த நிலையில் பவுண்டரி அடித்து அணிக்கு வெற்றி தேடித் தந்தார் அப்துர் ரஸ்ஸாக்.

இதன் மூலம் 7 விக்கெட் இழப்புக்கு 276 ரன்கள் எடுத்து வங்கதேச அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த முதல் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி பெற்றிருந்தது.

2வது வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை கைப்பாற்றி புதிய சாதனை படைத்துள்ளது.

இதுதான் முதல் தொடர் வெற்றி...

டெஸ்ட் போட்டியில் ஆடும் நாட்டுக்கு எதிராக ஒரு நாள் போட்டித் தொடர் ஒன்றை வங்கதேசம் கைப்பற்றியிருப்பது இதுவே முதல் முறையாகும்.

இதுவரை 200 ஒரு நாள் போட்டிகளில் வங்கதேசம் விளையாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த 200 ஒரு நாள் போட்டிகளிலும், இன்றைய போட்டிதான் வங்கதேச அணி சேஸ் செய்த அதிகபட்ச ஸ்கோரும் ஆகும்.

வங்கதேச அணி வெளிநாட்டு மண்ணில் வென்றுள்ள முதல் ஒரு நாள் போட்டித் தொடரும் இதுவே.

செயின்ட் கீட்ஸ் தீவில் உள்ள வார்னர் பூங்காவில் வெள்ளிக்கிழமை 3வது மற்றும் கடைசிப் போட்டி நடைபெறுகிறது. இதையும் வெல்வோம் என்று வங்கதேச கேப்டன் ஷாகிப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதே மைதானத்தில் வருகிற ஞாயிற்றுக்கிழமை இரு அணிகளுக்கும் இடையிலான டுவென்டி 20 போட்டியும் நடைபெறவுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:28 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+