பெங்களூர்: தொழில்நிறுவனங்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியின்போது எதிரணி வீரரை கெட்ட வார்த்தையால் திட்டி மிகவும் மோசமாக நடந்து கொண்ட வேகப்பந்து வீச்சாளர் பிரவீன் குமாருக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
ஓ.என்.ஜி.சி. அணி சார்பில் ஆடிய பிரவீன் குமார், வருமான வரித்துறை அணியின் வீர் அஜீத் அர்கல் என்பவரை மிகக் கடுமையாகவும், கெட்ட வார்த்தையிலும் திட்டமி அவதூறாகவும், மோசமாகவும் நடந்து கொண்டார். இதுகுறித்து கிரிக்கெட் வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டது.
மேலும் கிரிக்கெட் விளையாடுவதற்கு மனதளவில் பிரவீன் குமார் தகுதியுடன் இல்லை என்று நடுவர் தனஞ்செய் சிங் கிரிக்கெட் வாரியத்தில் அளித்த புகாரில் கூறியிருந்தார். இதையடுத்து விசாரணை நடத்திய கிரிக்கெட் வாரியம் தற்போது பிரவீன் குமாரை தற்காலிகமாக தடை செய்து உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பிரவீன் குமாருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. தனது நடத்தை தொடர்பாகஅவர் விளக்கம் தர வேண்டும். அதுவரை அவர் எந்தவிதமான போட்டியிலும் விளையாட அனுமதிக்கப்பட மாட்டார் என்று தெரிவித்தார்.