மும்பை: இந்திய கால்பந்து சங்கத்துக்கு ரூ. 25 கோடி வளர்ச்சி நிதி வழங்குவதாக இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக திகழ்ந்து வரும் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தடகளம், நீச்சல் உள்ளிட்ட மற்ற விளையாட்டுகளுக்கும் உதவி வருகிறது.
அடுத்த ஆண்டு டெல்லியில் நடக்கவிருக்கும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்கும் தடகள வீரர்களுக்கு பயிற்சி கொடுப்பதற்காக ரூ. 50 கோடி கொடுத்துள்ளது. மேலும், பீஜிங் ஒலிம்பிக் பதக்கம் வென்ற அபினவ் பிந்த்ரா, விஜேந்தர் சிங், சுஷில் குமார் ஆகியோருக்கு பரிசுகளை வாரி வழங்கியது.
இந்நிலையில் சமீபத்தில் மத்திய உள்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சரும், இந்திய கால்பந்து சங்கத்தி்ன் தற்போதைய தலைவருமான பிரபுல் படேல், கிரிக்கெட் வாரியம் கால்பந்து விளையாட்டுக்கும் நிதி வழங்க வேண்டும் என கேட்டு கொண்டார்.
இதையடுத்து நேற்று நடந்த கிரிக்கெட் வாரியத்தின் செயற்குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதன் பின்னர் நீதி வழங்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.
இரண்டு தவணைகளில்...
இது குறித்து கிரிக்கெட் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ரத்னாகர் ஷெட்டி கூறுகையில்,
கால்பந்து சங்கத்துக்கு, கிரிக்கெட் வாரியம் இந்த ரூ. 25 கோடி நிதி அளிக்கவிருக்கிறது. இதை தலா ரூ. 12.5 கோடி வீதம் இரண்டு தவணைகளில் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் கொடுக்கும்.
தனிநபர் விளையாட்டுகளுக்கு கிரிக்கெட் வாரியம் தொடர்ந்து ஆதரவு கொடுக்கும். அந்த விளையாட்டு வீரர்கள் அவர்களது திறமை வைத்து அடையாளம் காணப்படுவார்கள் என்றார்.
கால்பந்து சங்கம் நன்றி...
இந்நிலையில் கால்பந்து சங்கத்தின் தற்போதைய தலைவர் பிரபுல் படேல் கூறுகையில், கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இந்த உதவியின் இந்தியாவில் கால்பந்து விளையாட்டை எழுச்சி பெற செய்வோம்.
இந்தியா பல ஆண்டுளாக கிரிக்கெட் ரசிகர்களின் நாடாக இருந்து வருகிறது. இனி இந்தியா கால்பந்து ரசிகர்களின் நாடாகவும் இருக்கும் என்றார்.