
குருநாத் மெய்யப்பனுக்கும் பெட்டிங்கில் தொடர்பு இருப்பதாக செய்திகள் வெளியானது முதலே இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும் என்று அவரது எதிர்ப்பு கோஷ்டியினர் வலியுறுத்தி வருகின்றனர். இதற்காகவே சில ஊடகங்களும் பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன. தற்போது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய நிர்வாகிகள் அனைவரும் நாளை நடைபெற உள்ள ஐபிஎல் 6வது தொடரின் இறுதிப் போட்டியைப் பார்ப்பதற்காக கொல்கத்தாவில் கூடியுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்போது தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சீனிவாசன் தலைவர் பதவியில் இருந்து விலக முடியாது என்று தொடர்ந்தும் கூறிவருவதால் அவரை முதல் கட்டமாக பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சஸ்பென்ட் செய்து தீர்மானம் நிறைவேற்றுவது என்று முடிவு செய்திருக்கின்றனர். அப்படி சீனிவாசன் சஸ்பென்ட் செய்யபட்டால் இடைக்கால தலைவராக ஷசான்க் மனோகரை நியமிக்கவும் திட்டமிட்டிருக்கின்றனர்.
இது தொடர்பாக மனோகரிடமும் பிசிசிஐ நிர்வாகிகள் பேசியுள்ளனர். இந்த மனோகரை தேர்தல் மூலம் தோற்கடித்து பதவியைக் கைபற்றியவர்தான் சீனிவாசன். சீனிவாசனின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை உள்ளது. ஆனால் சீனிவாசனை சஸ்பென்ட் செய்துவிட்டு தேர்தலை நடத்துவது எனவும் பிசிசிஐ நிர்வாகிகள் யோசித்து வருகின்றனர்.