மும்பை: ஐபிஎல். கிரிக்கெட் போட்டியில் நடன பெண்களுக்கு தடை விதிக்க முடியாது என்று மும்பை போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் சார்பில் நடைபெற்றுவரும் ஐபிஎல் டுவென்டி- 20 போட்டி தொடரின்போது ரசிகர்களை உற்சாகப்படுத்துவதற்காக வெளிநாட்டு நடனப் பெண்கள் ஆடி வருகின்றனர்.
சமீபத்தில் மும்பையில் நடந்த போட்டியின்போது இந்த பெண்களின் ஆட்டத்தில் கவர்ச்சி ரொம்பவே தூக்கலாக இருந்ததாக புகார் எழுந்தது. மகாராஷ்டிரா உள்துறை அமைச்சர் சித்தாராம் மெஹித்திரி கூட இந்த நடனத்தை 'முழுக்க முழுக்க ஆபாசம்' என்று வருணித்தார்.
ஆனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கத்துடனேயே இந்த நடனத்துக்கு ஏற்பாடு செய்திருப்பதாக ஐபிஎல் நிர்வாகிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையி்ல், வெளிநாட்டு அழகிகளின் உற்சாக நடனத்துக்கு தடைவிதிக்க மும்பை போலீஸ் கமிஷனர் ராம்ராவ் வாக் மறுத்துள்ளார்.
அதேசமயத்தில், அழகிகளின் ஆடைகள் கண்ணியமாகவும், ஆட்டத்தில் ஆபாசம் இல்லாமலும் பார்த்துக் கொள்ளவேண்டும். மீறி ஆபாசமாக ஆடினால் சம்பந்தப்பட்ட ஐபிஎல் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்கமாட்டோம் என்றும் வாக் எச்சரித்துள்ளார்.